கொரோனா.. குஜராத்தான் கவலை அளிக்கிறது.. இறப்பு விகிதத்தில் இத்தாலிக்கு இணையானது.. புள்ளி விவரம்!
இந்தியாவில் கொரோனா காரணமாக ஏற்படும் இறப்பில் குஜராத் வேகமாக முன்னேறி வருகிறது.
அகமதாபாத்: இந்தியாவில் கொரோனா காரணமாக ஏற்படும் இறப்பில் குஜராத் வேகமாக முன்னேறி வருகிறது. மற்ற எந்த மாநிலங்களையும் விட குஜராத்தில்தான் இறப்பு விகிதம் அதிகமாக இருக்கிறது.
Recommended Video
உலகம் முழுக்க கொரோனா, அனைத்து நாடுகளையும் ஆட்டிப்படைத்துக் கொண்டு இருக்கிறது. உலகம் முழுக்க தினமும் குறைந்தது 1 லட்சம் பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்படுகிறார்கள். நேற்று முதல் நாள் ஐந்து லட்சமாக இருந்த எண்ணிக்கை நேற்று 6 லட்சத்தை தொட்டது.
இன்று வரை உலகம் முழுக்க 620,938 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதுவரை 28,653 பேர் உலகம் முழுக்க பலியாகி உள்ளனர்.
இத்தாலி மோசம்
உலகில் அமெரிக்காவில்தான் அதிகமான நபர்கள் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளனர். அமெரிக்காவில் 105,019 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு 1717 பேர் இதனால் பலியாகி உள்ளனர். ஆனால் இறப்பு எண்ணிக்கையை கணக்கிட்டால் இத்தாலியில்தான் அதிகமாக 9134 பேர் பலியாகி உள்ளனர். அங்கு கொரோனா காரணமாக 86,498 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இத்தாலி இறப்பு விகிதம்
உலகிலேயே இத்தாலியில்தான் கொரோனா காரணமாக இறப்பு விகிதம் அதிகமாக இருக்கிறது. அங்கு கொரோனா பாதித்த நபர்களில் 10 பேரில் ஒருவர் பலியாகிறார். தற்போது அங்கு இறப்பு விகிதம் 10% ஆக இருக்கிறது. கொரோனா காரணமாக கடந்த ஒரு மாதமாக அங்கு இறப்பு சதவிகிதம் 10%தான். அமெரிக்காவில் இறப்பு சதவிகிதம் 1% ஆக உள்ளது. சீனாவில் இறப்பு சதவிகிதம் 3% என்ற நிலையில் உள்ளது.
இந்தியா நிலை என்ன
இந்தியாவில் இறப்பு சதவிகிதம் 2%த்தில் இருக்கிறது. 1033 பேர் வரை இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்தியாவில் 37 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். இந்தியாவில் அதிகமாக மகாராஷ்டிராவில்தான் 7 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு 197 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு இறப்பு விகிதம் 1%க்கும் குறைவாகவே உள்ளது.
குஜராத் எப்படி
ஆனால் இந்தியாவில் குஜராத்தான் கவலை அளிக்கும் வகையில் உள்ளது. குஜராத்தில் 53 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு இதுவரை 5 பேர் பலியாகி உள்ளனர். அதாவது அங்கு கொரோனா பாதித்த 10ல் ஒருவர் பலியாகிறார். அதாவது குஜராத்தில் இறப்பு விகிதம் 10% ஆக உள்ளது. இந்தியாவில் இத்தாலிக்கு இணையான இறப்பு விகிதம் கொண்ட ஒரே மாநிலம் குஜராத்தான்.
அதிர்ச்சி அடைய வைக்கிறது
அங்கு போதிய மருத்துவ மனைகள் இல்லாததும், மருத்துவர்கள் இல்லாததும்தான் இதற்கான காரணம் என்கிறார்கள். அதேபோல் அங்கு கொரோனா சோதனை மிகவும் மெதுவாக செய்யப்படுவதாக புகார் உள்ளது. இந்திய மக்களை இந்த புள்ளி விவரம் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. 2004 லோக்சபா தேர்தலின் போது குஜராத் மாடல் என்று விளம்பரம் செய்யப்பட்ட அதே மாநிலம்தான் தற்போது இப்படி ஒரு மோசமான நிலையில் உள்ளது.