கொரோனா வைரஸ் தாக்குமோ என அச்சம்.. கேரளாவில் தீவிர கண்காணிப்பில் 430 பேர்.. முக்கிய தகவல்கள்
Recommended Video
டெல்லி: கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக டெல்லி, மும்பை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் உள்ள மருத்துவமனைகளின் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் 12க்கு ம் மேற்பட்டோர் கண்காணிக்கப்படுகிறார்கள். இதேபோல் வைரஸ் தாக்கிவிடுமோ என்ற அச்சம் காரணமாக கேரளாவில் 400 க்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்கள்.
சீனாவில் கொரோனா வைரஸ் தனது கொடிய முகத்தை வெளிப்படுத்தியதால் 106 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். 4,000 க்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பா வரை கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதாக தெரியவந்துள்ளதால் உலகளாவிய பயத்தைத் தூண்டியுள்ளது. இந்த வைரஸுக்காக இந்தியா முழுவதும் பல்வேறு விமான நிலையங்களில் இதுவரை 30,000 பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். சீனாவுக்கு வெளியே பலருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள போதிலும், உலக சுகாதார நிறுவனம் புதிய வைரஸால் உலக சுகாதார அவசரநிலை என்று அறிவிப்பதை நிறுத்தி வைத்துள்ளது.
கொரோனா வைரஸ்.. 6 நாட்களில் பிரம்மாண்ட மருத்துவமனை கட்டும் சீனா.. எப்படி சாத்தியம்.. மாஸ் பின்னணி!
கேரளாவில்
கேரளாவின் மூன்று நகரங்களில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்ட ஏழு பேரில் ஆறு பேருக்கு நடத்தப்பட்ட சோதனை நெகட்டிவ் (பாதிப்பில்லை) என வந்துள்ளது என்றும், ஒருவரின் முடிவு மட்டும் இன்னும் வரவில்லை என்றும் அதற்காக காத்திருக்கிறோம் என்றும் மத்திய சுகாதார அமைச்சகத்தின் ஆலோசகர் டாக்டர் சௌகாத் அலி கூறினார்.
மும்பையில் 4 பேர்
டெல்லியில் அரசு நடத்தும் ஆர்.எம்.எல் மருத்துவமனையில் மூன்று பேர் கண்காணிக்கப்பட்டு வருவதாக செய்தி நிறுவனமான பிடிஐ தெரிவித்துள்ளது. மும்பையில் நான்காவது நபராக தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் 36 வயது நபர் அனுமதிக்கப்பட்டுள்ளர். சமீபத்தில் சீனாவிலிருந்து திரும்பிய 28 வயது நபர், சண்டிகர் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எச்சரிக்கை
ஜனவரி 1 முதல்சீனாவில் இருந்தவர்களுக்கு காய்ச்சல், இருமல், சுவாசக் கோளாறு போன்ற அறிகுறிகள் ஏதேனும் ஏற்பட்டால், அருகிலுள்ள அரசு மருத்துவமனயில் உடனே தகவல் தெரிவிக்குமாறு மத்திய சுகாதார அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.. சமீபத்தில் சீனாவிலிருந்து திரும்பிய ஒரு பெண்ணும் அவரது மகனும் மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைனில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். வுஹானில் அந்த மாணவர் மருத்துவம் படித்துக்கொண்டிருந்தார்.
300 இந்தியர்கள்
கொரோனா வைரஸ் உருவான சீனாவின் மையப்பகுதி நகரமான வுஹானில் சிக்கியுள்ள 250 முதல் 300 க்கும் மேற்பட்ட இந்தியர்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் விமான நிறுவனங்களுக்கு விமான அறிவிப்புகளை வெளியிடவும், சீனாவுடன் நேரடி அல்லது மறைமுக இணைப்பு விமானங்களை விடுமாறு கேட்டுக்கொள்ளும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
அரசு அதிரடி உத்தரவு
கொரோனா வைரஸைத் தடுப்பதற்கும் நிர்வகிப்பதற்கும் தயாராக இருப்பதற்காக ஆய்வு செய்யுமாறு மத்திய சுகாதார செயலாளர் பிரீதி சூடன், நேபாளத்தின் எல்லையான உத்தராகண்ட், உத்தரபிரதேசம், பீகார், மேற்கு வங்கம் மற்றும் சிக்கிம் ஆகிய ஐந்து மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் காவல்துறைத் தலைவர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
சீனாவின் சோதனை
உயிர் கொல்லி ஆபத்து உடையது அத்துடன் எளிதாக பரவக்கூடியது, மருந்துகள் இல்லை என்பதால் கொரோனா வைரஸ் மக்களிடையே மரண பீதியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை இந்த வைரஸ்க்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க முடியவில்லை. மூன்று மாத காலத்திற்குள் முதல் தடுப்பூசிகளை கண்டுபிடிக்க முடியும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர். சீனா எச்.ஐ.வி மருந்து அலுவியாவை ஒரு சிகிச்சையாக பரிசோதித்து வருகிறது.
SARS வைரஸ்
வைரஸ் பாதித்த வுஹானில் கடுமையான பயணக் கட்டுப்பாடுகள் உள்ளன, நகர்ப்புற போக்குவரத்து நிறுத்தப்பட்டு, வெளிச்செல்லும் விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. வைரஸைக் கட்டுப்படுத்தும் மற்றொரு நடவடிக்கையாக சீனா அனைத்து வகையான சுற்றுப்பயணங்களையும் தடுத்து நிறுத்தியுள்ளது, இதனிடயே கொரோனா என்ற இந்த புதிய வைரஸ் 2002-03 ஆம் ஆண்டில் சீனா மற்றும் ஹாங்காங்கில் கிட்டத்தட்ட 800 பேரைக் கொன்ற SARS வைரஸ் உடன் ஒற்றுமை இருப்பதால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.