22 கிராமங்கள்.. 40,000 பேர்.. 70 வயது முதியவரால் உண்டான பரபரப்பு.. கொரோனா "சூப்பர் ஸ்ப்ரெட்டர்"
70 வயது முதியவர் ஒருவருக்கு ஏற்பட்ட கொரோனா காரணமாக பஞ்சாப்பில் மொத்தம் 22 கிராமங்கள் மொத்தமாக மூடப்பட்டுள்ளது . மொத்தம் 40 ஆயிரம் பேர் இதனால் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.
சண்டிகர்: கொரோனா சூப்பர் ஸ்ப்ரெட்டர், வடஇந்திய ஊடகங்கள் தொடங்கி பஞ்சாப் அரசு அதிகாரிகள் வரை பலர் அவரை அப்படித்தான் அழைக்கிறார்கள். ஆம், அரசு கொடுத்த எச்சரிக்கையை மீறி பொது நிகழ்ச்சி ஒன்றில் இவர் கலந்து கொண்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் பல்தேவ் சிங். கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் இவர் இத்தாலி மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு சுற்றி இருக்கிறார். அதன்பின் மார்ச் தொடக்கத்தில் இந்தியா வந்துள்ளார்.
என்ன அறிகுறி
மார்ச் 8ம் தேதி 70 வயது நிரம்பிய இவர் லேசான காய்ச்சலோடு நாடு திரும்பியவருக்கு பெரிய அளவில் கொரோனா அறிகுறி இல்லை. இதனால் அவரை மருத்துவர்கள் வீட்டிலேயே 14 நாட்கள் இருக்கும்படி கூறி உள்ளனர். போலீசாரும் இவரிடம் கண்டிப்புடன் வீட்டிலேயே 14 நாட்கள் இருங்கள், எங்கேயும் வெளியே வர வேண்டாம் என்று கண்டிப்பாக கூறிவிட்டார்கள். முதல் 4 நாட்கள் இவர் போலீஸ் சொல்படியே வீட்டிற்குள் இருந்துள்ளார்.
விழா
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் பஞ்சாப்பில் நடந்த சீக்கிய விழா ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். ஹோலா மோஹல்லா என்ற சீக்கிய விழா ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். இந்த விழாவில் மொத்தம் 10 ஆயிரம் பேர் கலந்து கொண்டுள்ளனர். மொத்தமாக 6 நாட்கள் இந்த விழா நடந்துள்ளது. இந்த விழாவில் மொத்தம் 6 நாட்களும் பல்தேவ் சிங் கலந்து கொண்டுள்ளார்.
பலியானார்
இந்த நிலையில் விழாவிற்கு சென்று திரும்பிய பின்தான் இவருக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விழாவிற்கு சென்று திரும்பிய இரண்டு நாட்களில் இவருக்கு கொரோனா தீவிரம் ஆகி படுத்தப்படுக்கையானார். அதன்பின் மார்ச் 18ம் தேதி கொரோனா காரணமாக இவர் பலியானார். இவருக்கு எடுக்கப்பட்ட ரத்த சோதனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டது.
கேட்காமல் சுற்றினார்
அரசு இவரை வெளியே செல்ல கூடாது என்று கூறிய நிலையிலும் கூட, இவர் பல இடங்களுக்கு சென்றுள்ளார். மக்கள் பெரிய அளவில் கலந்து கொண்ட கூட்டங்களில் கலந்து கொண்டு கொண்டாடி இருக்கிறார். இதனால் இவர் மூலம் பலருக்கு கொரோனா வைரஸ் பரவி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. தற்போது இவரால் இவரின் குடும்பத்தை சேர்ந்த 22 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மூடல்
அதோடு மொத்தம் 45 பேருக்கு இவருடன் பழகியதால் கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த விழாவிற்கு சென்றவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்கள். மொத்தம் 40 ஆயிரம் பேர் இதனால் வீட்டிற்குள் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். 15 கிராமங்களுக்கு மொத்தமாக சீல் வைக்கப்பட்டு உள்ளது. மொத்தமாக இவர் சென்ற 22 கிராமங்களில் இருந்து மக்கள் வெளியே வர கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.