தேவைப்பட்டால் லாக்டவுனை நீட்டிப்போம்- ம.பி. முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் அதிரடி
போபால்: தேவைப்பட்டால் ஏப்ரல் 14-ந் தேதிக்கு பின்னர் லாக்டவுனை நீட்டிப்போம் என்று மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் அதிரடியாக அறிவித்துள்ளார்.
கொரோனா பரவுவதை தடுக்க நாடு முழுவதும் 2 வாரங்களாக லாக்டவுன் அமலில் இருந்து வருகிறது. வரும் ஏப்ரல் 14-ந் தேதி வரை லாக்டவுன் நடைமுறைப்படுத்தப்படும்.
ஏப்ரல் 14-ந் தேதிக்குப் பின்னரும் லாக்டவுன் நீட்டிக்கப்படுமா? என்பது குறித்து விவாதம் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக மாநில அரசுகளுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.
லாக்டவுனை மேலும் நீட்டிக்கலாம் என பல மாநிலங்கள் மத்திய அரசிடம் பரிந்துரைத்துள்ளன. இந்த நிலையில் தேவைப்பட்டால் லாக்டவுனை நீட்டிப்போம் என்று மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் அதிரடியாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக சிவராஜ்சிங் சவுகான் கூறுகையில், நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துவிட்டால் மறுசீரமைத்துவிட முடியும். ஆனால் மனித உயிர்கள் மரணித்துப் போய்விட்டால் மீட்டு எடுப்பது எப்படி சாத்தியமாகும்?
ஆகையால்தான் சொல்கிறோம்.. தேவைப்பட்டால் லாக்டவுன் காலத்தை நீட்டிக்கவும் செய்வோம். அப்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு செய்து அறிவிப்போம் என்றார்.