டெல்லியில் இருந்து 1,300 கி.மீ தூரம்.... காரில் வந்த ஜார்க்கண்ட் பாஜக எம்.பி.க்கு கொரோனா பரிசோதனை
ராஞ்சி: டெல்லியில் கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 14 நாட்களுக்குப் பின்னர் காரிலேயே ஜார்க்கண்ட் மாநிலம் வந்த பாஜக எம்.பி. பி.என்.சிங்குக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.
ஜார்க்கண்ட்டை சேர்ந்த பாஜக எம்.பி.யான பி.என். சிங், ஹோலி பண்டிகை முடிந்த நிலையில் டெல்லி சென்றார். கொரோனா தாக்கம் அதிகம் இருந்ததால் அவர் டெல்லியில் தனிமைப்படுத்திக் கொண்டார்.
அவரது ஓட்டுநரும் தனிமைப்படுத்திக் கொண்டார். இந்த 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் முடிவடைந்த நிலையில் டெல்லியில் இருந்து 1300 கி.மீ. தொலைவில் உள்ள ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு காரிலேயே எம்.பி. பி.என். சிங்கும்அவரது ஓட்டுநரும் வந்துள்ளனர்.
ஆனால் இருவரும் மாநிலத்துக்கு திரும்பிய தகவல் வேறு யாருக்கும் தெரியவில்லை. இத்தகவல் நேற்றுதான் மாவட்ட நிர்வாகத்துக்கு கிடைத்திருக்கிறது. இதனையடுத்து எம்.பி.யான பி.என்.சிங் மற்றும் அவரது ஓட்டுநருக்கு இன்று கொரோனா பரிசோதனை நடத்தப்பட இருக்கிறது.
குஜராத்தில் ஷாக்.. காங். எம்எல்ஏவுக்கு கொரோனா-சிஎம், அமைச்சர்களை சந்தித்த சில மணிநேரத்தில் அறிவிப்பு
மேலும் இருவரையும் 14 நாட்கள் தனிமைப்படுத்தவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.