லாக்டவுனுக்கு எதிர்ப்பு- குஜராத்தின் சூரத் வீதிகளில் போராட்டம் நடத்திய பிற மாநில தொழிலாளர்கள்
சூரத்: கொரோனாவை தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள லாக்டவுனை நீட்டிக்க எதிர்ப்பு தெரிவித்து குஜராத்தின் சூரத் நகரில் நூற்றுக்கணக்கான பிற மாநில தொழிலாளர்கள் போராட்டம் நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டது.
Recommended Video
நாடு முழுவதும் லாக்டவுனை அமல்படுத்தப்பட்ட போது பிற மாநிலங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல கால அவகாசம் வழங்கப்படவில்லை. இதனால் அவர்கள் பிற மாநிலங்களில் பெரும் துயரை சந்திக்க நேரிட்டது.
இதனால் பல்வேறு நகரங்களில் இருந்து பல நூறு, ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சொந்த ஊர்களுக்கு கால்நடையாகவே இந்த தொழிலாளர்கள் பல்லாயிரக்கணக்கனோர் புறப்பட்டனர். இதனால் நிலைகுலைந்த மாநில அரசுகள், பிற மாநில தொழிலாளர்களை அந்தந்த மாநிலங்களில் தங்க வைத்து சிறப்பு ஏற்பாடுகளை செய்து வந்தன.
ஆனால் மத்திய அரசு இதுபற்றி எதுவுமே கவலைப்படவில்லை. டெல்லியில் ஒரே நேரத்தில் பல லட்சம் பேர் கால்நடையாக வெளியேறிய போதும் மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில் லாக்டவுன் மேலும் 19 நாட்கள் நீட்டிக்கப்படும் என்று பிரதமர் மோடி நேற்று அறிவித்தார்.
அமெரிக்காவில் கொரோனா மிக உக்கிரம் - உயிரிழந்தோர் எண்ணிக்கை 26 ஆயிரத்தை தாண்டி பேரழிவு
பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பு அகதிகளாக தவிக்கும் பிற மாநில தொழிலாளர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனால் மும்பை பாந்தராவில் ஒன்று திரண்ட பிற மாநில தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க கோரி போராட்டம் நடத்தினர். ஆனால் போலீசார் இவர்களை தடியடி நடத்தி கலைந்து போகச் செய்தனர்.
அதேபோல் குஜராத்தின் சூரத் நகரிலும் பிற மாநில தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க கோரி போராட்டம் நடத்தினர். இதனால் சூரத் நகரில் பெரும் பதற்றம் நிலவியது. ஏற்கனவே சூரத் நகரில் பிற மாநில தொழிலாளர்கள் போராட்டம் நடத்தியும் இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.