கொரோனா லாக்டவுன்: 8 மாத கர்ப்பிணி- பட்டினியுடன் 100 கி.மீ. நடைபயணம்-மீட்ட பொதுமக்கள்- டெல்லி துயரம்
மீரட்: கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் திடீரென அமல்படுத்தப்பட்ட 21 நாள் லாக்டவுன் பல லட்சம் கூலித் தொழிலாளர்களின் வாழ்வில் பெருந்துயரத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
Recommended Video
நாட்டு மக்கள் கொரோனவால் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக 21 நாட்கள் லாக்டவுனை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. இந்த லாக்டவுன் ஏற்படுத்தியிருக்கும் விளைவுகள் மிகவும் பாரதூரமானவை.
கொரோனா வைரஸ் கிளைமாக்ஸ்: ஏப்ரல் 2 வரை ரொம்ப கவனமாக இருங்க - மே 29ல் முடிவுக்கு வரும்
கைவிட்ட தொழிற்சாலைகள்
தலைநகர் டெல்லியில் தினக்கூலிகளாக பணிபுரிந்த பிற மாநில தொழிலாளர்கள் பல லட்சம் பேர் வேலை இழந்தனர். அவர்கள் பணிபுரிந்த தொழிற்சாலைகள், நிறுவனங்கள் 21 நாட்களுக்கு தேவையான வசதிகளை செய்து தர முடியாது என கைவிரித்தன. இதனால் கையிருப்புடன் இரண்டொரு நாள் பொறுமை காத்தவர்கள், சொந்த மாநிலத்துக்கு ஒரே நேரத்தில் புறப்பட்டனர்.
தேசம் திகைத்தது
இப்படி பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் திடீரென டெல்லியை விட்டு புறப்பட்ட தருணம் தேசத்தையே திகைக்க வைத்தது. இவர்கள் தங்களது சொந்த மாநிலங்களுக்கு பல நூறு கிலோ மீட்டர் தொலைவு நடந்து சென்றவர்கள். பிஞ்சு குழந்தைகள் பொதி மூட்டைகளுடன் வெறுங்காலில் அந்த தார்சாலைகளில் நடந்து செல்லும் காட்சிகள் நெஞ்சை இடியாய் தாக்குகின்றன.
100 கி.மீ நடைபயணம்
அப்படி டெல்லியால் கைவிடப்பட்ட நிலையில் சொந்த ஊருக்கு கால்நடையாகவே புறப்பட்டவர்கள்தான் வகீலும் யாஸ்மினும்.. இதில் யாஸ்மீன் 8 மாத கர்ப்பிணி. அவர்கள் பணிபுரிந்த டெல்லி தொழிற்சாலை ஒன்று தங்கும் இடத்தையும் கொடுத்திருந்தது. ஆனால் லாக்டவுன் அறிவிக்கப்பட்டதால் இனி எந்த வசதியும் செய்து தரப்போவது இல்லை என கைவிரித்தார் தொழிற்சாலை உரிமையாளர். இதனால் வேறுவழியே இல்லாமல் சொந்த மாநிலமான உத்தரப்பிரதேசத்துக்கு அவர்கள் புறப்பட்டனர்.
மனிதாபிமான கரங்கள்
8 மாத கர்ப்பிணியான யாஸ்மினை அழைத்துக் கொண்டு வகீல் நெடுஞ்சாலையில் கொளுத்தும் வெயிலில் பயணித்துக் கொண்டே இருக்கிறார்... மீரட் வரும் வரை ஒரு உணவகம் கூட திறக்கவில்லை.. கர்ப்பிணியான மனைவியை கொடும் பட்டினியுடனேயே வகீல் அழைத்துச் செல்கிறார். மீரட் நகரில் தஞ்சமடைந்து உதவி கோரினார் வகீல். உள்ளூர் காவல்துறையினர் மனிதாபிமானத்துடன் உணவு வழங்கி ஆம்புலன்ஸ் ஒன்றை ஏற்பாடு செய்து சொந்த கிராமத்துக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர்.