சீனா பாணியில் ஒடிசா அரசு அதிரடி.. 5 மாவட்டங்கள், 8 நகரங்களுக்கு சீல்.. மக்களுக்கு தலா 5 கிலோ அரிசி
புவனேஸ்வர்: கொரோனா வைரஸ் பிரச்சினை பெரிதாகி கொண்டிருக்கக் கூடிய நிலையில், ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக், முக்கியமான முடிவை எடுத்துள்ளார். இதன்படி 22 ஆம் தேதி காலை 7 மணி முதல் முதல் 29ம் தேதி வரை 5 மாவட்டங்களில் முழுவதும், சீல் வைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
5 மாவட்டங்கள்-கோர்டா, கட்டாக், கஞ்சம், கேந்திரபாரா, அனுகுல் மற்றும் 8 நகரங்கள்-பூரி, ரூர்கேலா, சம்பல்பூர், ஜார்சுகுடா, பாலசோர், ஜஜ்பூர் சாலை, ஜஜ்பூர் டவுன் மற்றும் பத்ராக் ஆகியவை சீல் வைக்கப்படும்.
வீடுகளுக்குள்ளேயே மக்கள் இருக்குமாறும், மிக அத்தியாவசிய தேவை என்றால் மட்டுமே, வீட்டை விட்டு வெளியே வரும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். மருத்துவமனைகள், மருந்துகள், காய்கறிகள், மாமிசம், பால் போன்றவற்றை விற்பனை செய்யக்கூடிய கடைகள் மட்டும் திறந்து இருக்கும்.
மின்சாரம், குடிநீர், வங்கிகள், ஏடிஎம்கள், பெட்ரோல் பம்ப் ஆகியவையும் திறந்து இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று 12 மணி முதல் 70 ரத்த மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளன. அதில் இரண்டு பேருக்கு, கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக தெரியவந்தது.
அடையாளம் காணப்பட்ட இரு நோயாளிகளும், ஆரோக்கியமான நிலையில் உள்ளனர். இவர்களுடன் 56 பேர் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது.
எந்த ஒரு மீடியாவும் நோயாளிகளின் பெயர் உள்ளிட்ட விவரங்களை தெரிவிக்க கூடாது என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களிடம் பேட்டி எடுப்பதும் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
கொரோனோ நோயாளிக்கு மருத்துவமனையில் எப்படி சிகிச்சையளிப்பது? மருத்துவ கையேடு
ஏழைகளுக்கு உணவு வழங்கக்கூடிய கடமையை உணர்ந்து மாநில உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஐந்து லட்சம் பயனாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களுக்கு, ஒரு நபருக்கு தலா 5 கிலோ அரிசி ஒரு மாதத்திற்கு வழங்கப்படும். ஒரு ரூபாய் என்ற விலையில் இது வழங்கப்படும். ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களில் இவை வழங்கப்படும். 24ஆம் தேதி அரிசி விநியோகம் ஆரம்பிக்கும்.
இவ்வாறு முதல்வர் நவீன் பட்நாயக் உத்தரவிட்டுள்ளார். நகரங்களை சீல் வைப்பது சீனா மாடல் டெக்னிக்காகவும், அதை கையில் எடுத்து அதிரடி காட்டியுள்ளார் நவீன் பட்நாயக்.