மாவட்டத்திற்கு ஒரு கொரோனா மருத்துவமனை.. ஒடிசாவில் அரசு அதிரடி முடிவு.. கலக்கும் நவீன் பட்நாயக்!
ஒடிசாவில் கொரோனாவை குணப்படுத்துவதற்காக அனைத்து மாவட்டங்களில் சிறப்பு கொரோனா மருத்துவமனைகளை அம்மாநில அரசு அமைக்க முடிவு செய்துள்ளது.
புவனேஷ்வர்: ஒடிசாவில் கொரோனாவை குணப்படுத்துவதற்காக அனைத்து மாவட்டங்களில் சிறப்பு கொரோனா மருத்துவமனைகளை அம்மாநில அரசு அமைக்க முடிவு செய்துள்ளது.
ஒடிசாவில் மொத்தம் 73 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு 24 பேர் குணப்படுத்தப்பட்டுள்ளனர். ஒரே ஒருவர்தான் அங்கு பலியாகி உள்ளார். மீதம் இருக்கும் 48 பேர் நல்ல உடல் நிலையுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அண்டை மாநிலங்கள் எல்லாம் கொரோனா காரணமாக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒடிசா பெரிய அளவில் பாதிப்புகளை சந்திக்கவில்லை.
கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் ஒடிசா பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. நேற்று ஒடிசாவில் 13 பேருக்கு கொரோனா ஏற்பட்டதால் அங்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஒடிசாவில் கொரோனாவை குணப்படுத்துவதற்காக அனைத்து மாவட்டங்களில் சிறப்பு கொரோனா மருத்துவமனைகளை அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் அமைக்க முடிவு செய்துள்ளது. மொத்தம் மாநிலம் முழுக்க ஒரு மாவட்டத்திற்கு ஒன்று என்ற வீதத்தில் 36 மருத்துவமனைகளை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. தற்போது இருக்கும் மருத்துவமனைகள் அல்லாமல் புதிதாக இந்த மருத்துவமனைகள் அமைக்கப்பட உள்ளது.
இந்தியாவில் கொரோனாவிற்கு என்று தனியாக இரண்டு சிறப்பு மருத்துவமனைகளை உருவாக்கியது ஒடிசா மட்டும்தான். அங்குதான் 1000 பேர் சிகிச்சை பெறும் வகையில் வெறும் 6 நாட்களில் இரண்டு மருத்துவமனைகள் அமைக்கப்பட்டது. அங்கு மொத்தம் 30 மாவட்டங்களில் கொரோனா சிகிச்சைக்காக 6000 பெட்கள் கொண்ட மருத்துவமனைகள் அமைக்கப்பட்டு உள்ளது .
இந்த வாரம் மேலும் புதிதாக 6 கொரோனா மருத்துவமனைகள் அமைக்கப்பட உள்ளது. அதேபோல் அங்கு பயன்படுத்தப்படாத கட்டிடங்களை மருத்துவமனைகளாக மாற்றவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் அங்கு எல்லா மாவட்டங்களில் 10-20 வெண்டிலெட்டர்களை தயார் நிலையில் வைக்கவும் அரசு முடிவு செய்துள்ளது.
இதற்காக தனியார் உதவிகளை நாடவும், வெளிநாட்டில் இருந்து குறைந்த விலையில் மருத்துவ உபகரணங்களை ஆர்டர் செய்யவும் அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. அங்கு இருக்கும் எஸ்யுஎம் மற்றும் கிம்ஸ் மருத்துவமனைகள் இப்போதே கொரோனாவிற்கு எதிராக தீவிரமாக சிகிச்சை அளித்து வருகிறது. இரண்டிலும் ஒரே நேரத்தில் 150க்கும் அதிகமான கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும்.
Recommended Video
ஒடிசாவில் மருத்துவ தேவைக்காக வேதாந்தா நிறுவனம், டாட்டா நிறுவனம், நால்க்கோ நிறுவனம், பிரதீப் போர்ட் டிரஸ்ட் நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்கள் மருத்துவ பொருட்களை கொடுத்தும், நிதி கொடுத்தும் உதவி வருகிறது. ஒடிசாவில் புதிதாக 600 பார்மசிஸ்ட், 1000 லேப் டெக்னீஷியன்களை, 200 ரேடியோகிராபர்கள், 609 நர்ஸ்கள், 1250 ஸ்டாஃப் நர்ஸ்கள், 108 ஆயுர்வேத மருத்துவர்கள், 1040 எம்பிபிஎஸ் படித்து முடித்த புது மருத்துவர்கள் பணிக்கு எடுக்கப்பட்டு கொரோனாவிற்கு எதிராக களமிறக்கப்பட்டுள்ளனர்.