தெலுங்கானா ஷாக்.. கொரோனாவால் உயிரிழந்தவர் உடலை ஆட்டோவில் அசால்ட்டாக ஏற்றிச் சென்ற கொடுமை
நிஜாமாபாத்: தெலுங்கானாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் உடலை ஆட்டோவில் ஏற்றிச் சொன்ற கொடுமை நிகழ்ந்துள்ளது.
கொரோனாவால் மரணம் அடைந்தவர்களை உரிய கண்ணியத்துடனும் மரியாதையுடனும் அடக்கம் செய்ய வேண்டும் என்பது அரசுகளின் அறிவுறுத்தல். ஆனால் இதை கடைபிடிப்பதில் பல இடங்களில் அலட்சியம் காட்டுகின்றனர்.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இன்று முழு லாக்டவுன் - சாலைகள் வெறிச்சோடினா
கண்ணியமற்ற உடல் அடக்கம்
நெஞ்சை பதற வைக்கும் வகையில் பல இடங்களில் கொரோனாவால் உயிரிழந்தோர் உடல்கள் கண்ணியமற்ற முறையில் அடக்கம் செய்யப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும் இருக்கின்றன. இதனால் தொடர்ந்து அரசுத் தரப்பில் அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன.
ஆட்டோவில் ஏற்றப்பட்ட உடல்
இந்த நிலையில் தெலுங்கானாவின் நிஜாமாபாத்தில் 50 வயது கொரோனா நோயாளி ஒருவர் உயிரிழந்தார். அவரது உடல் ஆம்புலன்ஸில் ஏற்றிச் செல்லப்படாமல் ஒரு ஆட்டோவில் கொண்டு செல்லப்பட்டது. அதுவும் உயிரிழந்தவரின் தலை, கால்கள் வெளியே தெரியும் வகையில் உடல் எடுத்துச் செல்லப்பட்டது.
நிஜாமாபாத் மருத்துவமனை விளக்கம்
இது தொடர்பான படங்கள் வெளியாகி சர்ச்சையாயின. இது தொடர்பாக நிஜாமாபாத் அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் நாகேஸ்வர் ராவ் கூறுகையில், 50 வயது நோயாளி ஜூன் 27-ல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
உறவினர்களே காரணம்
பின் இரண்டு நாட்களில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது உடலை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் இறந்தவரின் உறவினர்கள் காத்திருக்காமல் ஆட்டோ ஒன்றை ஏற்பாடு செய்து உடலை கொண்டு சென்றனர். இதில் மருத்துவமனை நிர்வாகத்தின் தவறு ஏதும் இல்லை என்றார். இந்த படம் சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.