100 பேருக்கு ஆபத்து.. 23 பேருக்கு பாதிப்பு.. மரணமடைந்த 70 வயது தாத்தா மூலமாக பரவிய கொரோனா!
கொரோனா தாக்கி இறந்த ஒரு நபரால் 15 கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்
பஞ்சாப்: இறந்துபோன கொரோனா வைரஸ் நோயாளி மூலமாக 23 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் பஞ்சாபில் நடந்துள்ளது அனைவரையும் இது பதட்டமடைய வைத்துள்ளது.
Recommended Video
கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது... இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.. எனினும் உயிரிழப்புகளும் நடந்து வருகின்றன.
அதன்படி கடந்த 18-ம் தேதி பஞ்சாபில் ஒரு முதியவர் உயிரிழந்தார்.. கொரோனா வைரஸ் தாக்கி இறந்த 4-வது நபர் இவர் ஆவார்.. 70 வயதான இவர் ஜெர்மனியிலிருந்து இத்தாலி வழியாக பஞ்சாப் திரும்பினார்.. ஜெர்மனி, இத்தாலியில் 2 வாரத்துக்கு டூர் போய்விட்டு வந்தவர் தனிமைப்படுத்தப்பட்டார்.. ஆனாலும் மொத்த விதிகளையும் மீறிவிட்டார்.. மார்ச் 6 ஆம் தேதி டெல்லிக்கு வந்த அவர் திரும்பவும் பஞ்சாபிற்கு சென்றிருக்கிறார்.
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா தொற்று பாதிப்பு
கிராமம்
மார்ச் 8 மற்றும் 10-ம் தேதிகளில் ஆனந்த்பூர் சாஹிப்பில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஷாஹீத் பகத் சிங் நகர் மாவட்டத்தில் உள்ள தன்னுடைய கிராமத்திற்கு திரும்பியிருக்கிறார்.. வைரஸ் தொற்றுக்கான எந்த டெஸ்ட்டும் எடுக்கப்படவில்லை.. அதற்கு முன்னதாகவே அவர் 100 பேர் வரை தொடர்பு கொண்டுள்ளார்... இவருடன் மேலும் 2 பேர் சேர்ந்து மாநிலம் முழுவதும் 15 கிராமங்களுக்கு விசிட் அடித்து வந்துள்ளனர்.
இறந்துவிட்டார்
இதற்கு பிறகுதான் வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு இவர் இறந்துவிட்டார்.. ஆனால் இவர் மற்றவர்களுடன் தொடர்பில் இருந்ததால் அதன் விளைவு என்ன தெரியுமா? அவரது குடும்பத்தில், 14 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது... அவரது பேத்தி, பேரன் ஒவ்வொருவரும் ஏராளமான மக்களை சந்தித்து உள்ளனர். அதனால் ஒட்டு மொத்த கிராம மக்களுக்கும் இந்த தொற்று இருக்கிறதா என்ற சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
தனிமைப்படுத்துதல்
சமூக விலகல் என்பது ரொம்பவும் முக்கியம்.. அவசியம்.. இந்த 3 பேரின் பொறுப்பற்ற செயல்தான், COVID-19 க்கு ஆளான ஒவ்வொரு நபரையும் அந்த கிராமத்திலிருந்து அதிகாரிகள் தனிமைப்படுத்தி வருகிறார்கள். இது எல்லாவற்றையும் விட இன்னொரு ஷாக், இந்த 3 பேரும் நவன்ஷஹர், மொஹாலி, அமிர்தசரஸ், ஹோஷியார்பூர், ஜலந்தர் போன்ற இடங்களில் டூர் போனதால், அந்த பகுதியிலும் வைரஸ் தொற்றை பரப்பியிருக்கலாம் என நம்பப்படுகிறது.
17 பேருக்கு தொற்று
இன்றைய தினம், இந்தியா முழுதும் கிட்டத்தட்ட 700 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 17 பேர் இறந்துள்ளனர்.. இதை பார்த்தும் சமூக விலகலை கடைப்பிடிக்காமல் சிலர் உள்ளது அதிர்ச்சியாக உள்ளது.. வைரஸின் தீவிரத்தை முதலில் உணர வேண்டும்.. நம் உயிரையும் பாதுகாத்து, அடுத்தவர் உயிரையும் காப்பாற்றுவதுதான் சமூக விலகல்.
அலட்சியம் வேண்டாம்
ஒருவருடைய அலட்சியம்.. ஒட்டுமொத்த சமூகத்தையும் பாதிக்கும் அளவுக்கு இந்த வைரஸ் பரவல் உள்ளதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இன்னும் மருந்து கண்டுபிடிக்க முடியாத இந்த வைரஸை கண்டு உலக வல்லரசு நாடுகளே பயந்து கிடக்கும்போது, நம் நாடெல்லாம் எம்மாத்திரம்? அதனால் சமூக விலகலும், தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொள்வதும்தான் இப்போதைக்கு நமக்கு உடனடி மருந்து.. தயவு செய்து வீட்டை விட்டு வெளியே வராதீங்க!