கொரோனா கட்டுப்பாடு எதிரொலியால் சபரிமலைக்கு 'சாமிகள்' வருகை பெருமளவில் குறைந்தது!
பம்பை: கொரோனா கட்டுப்பாடுகள் கடுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளதால் சபரிமலையில் ஐயப்ப பக்தர்கள் வருகை பெருமளவில் குறைந்துவிட்டது.
கொரோனா பரவல் குறையாத நிலையில் கட்டுப்பாடுகளுடன் சபரிமலைக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மண்டல பூஜை, மகர பூஜைகளுக்காக ஆன்லைன் மூலம் பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே சபரிமலையில் அனுமதிக்கப்படுகின்றனர்.
மேலும் கொரோனா இல்லை என்ற சான்றிதழ் கட்டாயம் கொண்டுவர வேண்டும் என்கிற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது. அப்படி கொரோனா சான்றிதழ் பெறாதவர்கள், கேரளாவின் நிலக்கல்லில் இறங்கி பரிசோதனை செய்துவிட்டு சான்றிதழ் பெறலாம்.
பொதுவாக சபரிமலைக்கு பெருவழிப்பாதை, வழக்கமான நீலிமலை-அப்பாச்சிமேடு பாதை, புல்லுமேடு பாதைகள் வழியாக பக்தர்கள் வருகை தருவார்கள். இம்முறை இந்த மூன்று பாதைகளும் அடைக்கப்பட்டு பம்பையில் சுப்பிரமணிய பாதை வழியாக மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
அதேபோல் பம்பையில் புனித நீராடிவிட்டுதான் ஐயப்ப பக்தர்கள் மலையேறுவர். இம்முறை பம்பையில் புனித நீராடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்தகைய கெடுபிடிகளால் ஐயப்ப பக்தர்கள் வருகை பெருமளவில் குறைந்துவிட்டது. மேலும் வழக்கமான நாட்களில் 1,000 பேரும் சனி, ஞாயிறு நாட்களில் 2,000 பேரும்தான் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
பொதுவாக இந்த சீசனில் 3 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து செல்வர். ஆனால் இம்முறை வெறும் 9,000 பேர்தான் சபரிமலைக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.