கொரோனா வைரஸ் அச்சம்: மியான்மர் எல்லையை காலவரையின்றி மூடியது மணிப்பூர் அரசு
மோரே: கொரோனா வைரஸ் அச்சத்தால் மியான்மர் சர்வதேச எல்லையை காலவரையின்றி மூடியுள்ளது மணிப்பூர் மாநில அரசு.
Recommended Video
உலகை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 4,027 பேர் பலியாகி உள்ளனர். 1,14,422 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளது. இதுவரை இந்தியாவில் 44 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்குதலை தடுக்கும் வகையில் வடகிழக்கு மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிக்கிமுக்குள் பிற மாநிலத்தவர் நுழைவதை தடுக்க இன்னர் லைன் பெர்மிட் வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அருணாசல பிரதேசம், சீனாவுடனான எல்லையை மூடியுள்ளது.
Manipur CM N. Biren Singh: In view of the possible threat of transmission of #Coronavirus / COVID-19, the international border with Myanmar has been closed including gate no 1 and 2 in Moreh until further orders. pic.twitter.com/KTNm69mTyp
— ANI (@ANI) March 10, 2020
ஏற்கனவே பூடான் நாடும் இந்தியா, சீனாவுடனான எல்லைகளை மூடியிருக்கிறது. இந்த நிலையில் மணிப்பூர் மாநில அரசு மோரேவில் உள்ள மியான்மர் நாட்டுடனான சர்வதேச எல்லையை காலவரையின்றி மூடுவதாக அறிவித்துள்ளது.
மியான்மரில் இருந்து இந்தியாவின் மோரே நகருக்குள் காலை முதல் மாலை வரை அந்நாட்டவர் நாள்தோறும் வர்த்தகம் செய்ய அனுமதிக்கப்படுவர். அதேபோல் மோரே பகுதியில் இருந்து மியான்மரின் குறிப்பிட்ட பகுதிக்குள் இந்தியர்கள் செல்லவும் விசா உள்ளிட்ட ஆவணங்கள் இன்றி அனுமதிக்கப்பட்டு வந்தனர்.
தற்போது மணிப்பூர் அரசு எல்லைகளை காலவரையின்றி மூடி இருப்பதால் இந்த வர்த்தக நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தியா- மியான்மர் நாடுகளை இணைக்கும் வரலாற்று சிறப்புமிக்க இரும்பு பாலமும் மூடப்பட்டுள்ளது. இந்த இரும்புப் பாலம் சாலை மார்க்கமாக தென்கிழக்கு ஆசிய நாடுகளை இணைக்கக் கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.