மேகாலயா: கொரோனா பீதியால் ஷில்லாங் மருத்துவமனையில் இருந்து குதித்து நோயாளி தற்கொலை
ஷில்லாங்: மேகாலயாவில் கொரோனா நோய் அச்சத்தால் ஷில்லாங் மருத்துவமனையில் இருந்து குதித்து நோயாளி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
வடகிழக்கு மாநிலங்களில் கொரோனாவின் தாக்கம் குறைவாக இருக்கிறது. மேகாலயாவில் பெதானி மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
மேகாலயாவில் முதலாவது கொரோனா பாதித்த நபர் இந்த மருத்துவர். இதையடுத்து பெதானி மருத்துவமனைக்கு சென்றவர்கள் அனைவரும் அரசிடம் தெரிவித்து தங்களை பரிசோதனைக்குட்படுத்த வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
மேலும் ஷில்லாங் உள்ளிட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவும் அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில் ஷில்லாங் பெதானி மருத்துவமனையில் நோயாளி ஒருவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
கொரோனா அச்சத்தால்தான் அந்த நோயாளி மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்தார் எனவும் கூறப்படுகிறது. 26 வயது இளைஞரான அவர், தென்மேற்கு காசி ஹில்ஸ் பகுதியை சேர்ந்தவர்.