வேகம் எடுத்தது கொரோனா.. நாடு முழுக்க ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறதா? மத்திய அரசின் திட்டம் என்ன?
டெல்லி: கொரோனா பாதிப்பு தீவிரம் அடைந்துள்ள நிலையில் இந்தியாவில் ஊரடங்கு மேலும் சில நாட்களுக்கு நீட்டிக்கப்படலாம் என்று கூறுகிறார்கள்.
Recommended Video
கொரோனா காரணமாக இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 28 பேர் பலியாகி உள்ளனர். மொத்தமாக கொரோனாவால் இந்தியாவில் 111 பேர் பலியாகி உள்ளனர். மத்திய அரசு வெளியிட்ட புள்ளி விவரத்தின்படி இந்தியாவில் மொத்தம் 4281 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 704 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.
கொரோனாவை இந்தியாவில் கட்டுப்படுத்தும் வகையில் 21 நாட்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. வரும் ஏப்ரல் 14ம் தேதியோடு இந்த ஊரடங்கு முடிவிற்கு வருகிறது.
முதலில் மறுத்து வந்தது
இந்தியா முழுக்க விதிக்கப்பட்டு இருக்கும் இந்த லாக் டவுன் ஏப்ரல் 14க்கு பின் நீட்டிக்கப்படுமா என்று கேள்வி எழுந்தது. இந்தியாவில் கடந்த 5 நாட்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இரட்டிப்பு ஆகியுள்ளது. இதனால் இந்தியாவில் லாக் டவுன் நீட்டிக்கப்படுமா என்று கேள்வி எழுந்தது. ஆனால் மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கவுபா இந்த செய்தியை மறுத்தார். லாக் டவுன் நீட்டிக்கப்படாது என்று அவர் குறிப்பிட்டார்.
கடந்த மீட்டிங்
இந்த நிலையில்தான் கடந்த வாரம் பிரதமர் மோடி மாநில முதல்வர்களுடன் ஆலோசனை செய்தார். கொரோனாவிற்கு எதிரான மாநில அரசின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை செய்தார். இந்த ஆலோசனை கூட்டத்தில், மாநில முதல்வர்கள் கலந்துகொண்டனர். சில மாநிலத்தில் இருந்து முதல்வர்களுடன் தலைமைச் செயலாளர்கள், சுகாதாரத்துறை அமைச்சர்களும் கலந்து கொண்டனர். இதில் கொரோனாவிற்கு எதிரான லாக் டவுனை நீட்டிப்பது குறித்து விவாதிக்கப்பட்டு உள்ளது.
மாநில முதல்வர்கள் கோரிக்கை
இதில் கொரோனாவிற்கு எதிரான லாக் டவுனை இன்னும் இரண்டு வாரம் நீட்டிக்க வேண்டும் என்று மாநில முதல்வர்கள் பலர் கோரிக்கை வைத்துள்ளனர். கேரளா, உத்தர பிரதேசம், குஜராத், ஆந்திர பிரதேசம், மகாராஷ்டிரா, மேற்கு வங்க முதல்வர்கள் இந்த கோரிக்கையை வைத்துள்ளனர். அதேபோல் தெலுங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ், இந்த ஊரடங்கை இரண்டு வாரம் நீட்டிக்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் கடிதம் மூலம் நேற்று கோரிக்கை வைத்தார்.
பொருளாதாரம் சரிவு
இந்த ஊரடங்கு காரணமாக நாடு முழுக்க கடுமையான பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ளது. பொருளாதாரம் தொடர்ந்து மோசமான நிலைக்கு சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் ஊரடங்கு நீடித்தால் மேலும் பொருளாதாரம் பாதிக்கும் என்கிறார்கள். ஆனால் பொருளாதாரத்தை விட மக்கள் உயிர் முக்கியம். இதனால் ஊரடங்கை நீடித்துவிட்டு பொருளாதாரத்தை சரி செய்யும் வகையில் சலுகைகள் அறிவிக்கப்படும் என்று கூறுகிறார்கள்.
கொஞ்சமாக கொண்டு வர முடிவு
அதன்படி இந்தியாவில் ஊரடங்கு மேலும் சில நாட்களுக்கு நீட்டிக்கப்படலாம் என்று கூறுகிறார்கள். அதிகபட்சம் 2 வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என்று கூறுகிறார்கள். 2 வாரம் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும் இப்போது இருப்பது போல கட்டுப்பாடுகள் கடுமையாக இருக்காது. கட்டுப்பாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கப்படும், சில முக்கியமான மாவட்டங்களில் மட்டும் கடுமையான கட்டுப்பாடுகள் இருக்கும் என்கிறார்கள்.