334 சூப்பர் ஸ்பிரெட்டர்.. 'எல்' வகை கொரோனா.. குஜராத்தில் கேஸ்கள் அதிகரிக்க என்ன காரணம்.. பின்னணி!
அகமதாபாத்: குஜராத்தில் தொடர்ந்து கொரோனா கேஸ்கள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்ட மிக மோசமான மாநிலங்களில் ஒன்றாக குஜராத் மாறியுள்ளது.
குஜராத்தில் கடந்த ஏப்ரல் இரண்டாம் வாரத்தில்தான் கொரோனா தீவிரம் எடுக்க தொடங்கியது. வேகமாக கொரோனா பரவி தற்போது குஜராத்தில் 8,542 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு 2780 பேர் குணப்படுத்தப்பட்டுள்ளனர்.
513 பேர் பலியாகி உள்ளனர். 5249 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அகமதாபாத்தில் மட்டும் 6086 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4204 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 400 பேர் பலியாகி உள்ளனர். 1482 பேர் குணமடைந்து உள்ளனர்.
உச்சத்தில் கொரோனா.. அச்சத்தில் பெற்றோர்.. 10ம் வகுப்பு தேர்வு முடிவை மறுபரிசீலனை செய்யுமா அரசு?
குஜராத் மோசம்
இந்தியாவில் தினமும் அதிக கேஸ்கள் ஏற்படும் மாநிலங்களில் ஒன்றாக குஜராத் மாறியுள்ளது. அதேபோல் குஜராத்தில்தான் இந்தியாவில் குணப்படுத்தப்படும் நபர்களின் எண்ணிக்கையும் குறைவாக உள்ளது. அங்குதான் 513 பேர் பலியாகி உள்ளனர். குஜராத்தில்தான் இந்தியாவில் அதிகமாக 6% பலி சதவிகிதம் இருக்கிறது. மேற்கு வங்கத்தில் 8% பலி சதவிகிதம் உள்ளது. குஜராத் இப்படி பல விஷயங்களில் பின் தங்கி உள்ளது.
குஜராத் மாடல்
2014 லோக்சபா தேர்தலின் போது குஜராத் இந்தியாவின் மாடல் என்று பேசப்பட்டது. இதற்காக தீவிரமாக விளம்பரம் செய்யப்பட்டது. ஆனால் அதே குஜராத்தின் நிலை இப்போது படுமோசமாக மாறியுள்ளது. இப்படி குஜராத்தின் நிலை மோசமாக நிறைய காரணங்கள் சொல்லப்படுகிறது. அங்கு தலைநகர் அஹமதாபாத் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.அகமதாபாத்தில் மட்டும் 6086 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 400 பேர் பலியாகி உள்ளனர்.
பாதுகாப்பு படை குவிப்பு
முக்கியமாக அகமதாபாத் முனிசிபல் கவுன்சிலரே அங்கு கொரோனா பாதிப்பு சந்தேகம் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அங்கு கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் உள்துறை அமைச்சர் அமித் ஷா எய்ம்ஸ் குழுவை அனுப்பி உள்ளார். அதேபோல் ஏற்கனவே அங்கு எல்லை பாதுகாப்பு படையும் குவிக்கப்பட்டுள்ளது. அங்கு நிலைமை கைமீறி போய் உள்ளது.
மார்ச் மாதம் பதிவானது
அகமதாபாத் பகுதியில் கொரோனா கடந்த மார்ச் 19ம் தேதிதான் முதலில் பதிவானது. அன்றில் இருந்து தினமும் கேஸ்கள் வேகமாக உயர்ந்து வருகிறது. நாங்கள் அதிக டெஸ்ட் செய்கிறோம் இதுதான் கொரோனா கேஸ்கள் அதிகரிக்க காரணம் என்று அம்மாநில அரசு கூறுகிறார்கள். ஆனால் சென்னை அளவிற்கு கூட அங்கு கொரோனா சோதனைகள் செய்யப்படவில்லை. ஆனாலும் கேஸ்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
மக்கள் தொகை அதிகம்
குஜராத்தின் பெரும்பாலான கேஸ்கள் அகமதாபாத்தில்தான் ஏற்பட்டுள்ளது. இதற்கு அந்த பகுதியின் அதீத மக்கள் தொகை காரணம் என்று கூறுகிறார்கள். அங்கு மக்கள் நெருக்கடி மிக அதிகம். முக்கியமாக மக்கள் நெரிசல் அதிகமாக இருக்கும் ஜமால்பூர் பகுதியில் மட்டும் அகமதாபாத்தில் 700 கேஸ்கள் பதிவாகி உள்ளது. அருகே இருக்கும் பெஹ்ராம்பூரா, தரியாபூர், தனிலிம்டா ஆகிய பகுதிகளில் எல்லா இடங்களிலும் 100க்கும் மேல் கேஸ்கள் உள்ளது.
வசதி இல்லை
இந்த பகுதி சிறிய சிறிய வீடுகள் கொண்ட, கழிப்பறை வசதி இல்லாத போதிய முன்னேற்றம் இல்லாத குடிசை பகுதி ஆகும். இந்த பகுதிகளை இத்தனை வருட குஜராத் மாடல் சரியாக முன்னேற்றாததுதான் இந்த அதிக கேஸ்கள் உயர்வுக்கு காரணம் என்று கூறுகிறார்கள். தற்போதுதான் அங்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. அங்கு சரியாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தாததும் கேஸ்கள் இப்படி அதிகரிக்க காரணம் ஆகும்.
டெல்லி மாநாடு
அதேபோல் டெல்லி மாநாடு மூலமும் குஜராத்தில் கேஸ்கள் அதிகம் வந்தது. குஜராத்தில் இருந்து 1500 பேர் வரை டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டனர் என்று அம்மாநில அரசு கூறுகிறது. இவர்களில் பலர் அகமதாபாத் பகுதியை சேர்ந்தவர்கள். அங்கு கேஸ்கள் அதிகரிக்க இவர்கள்தான் காரணம் என்று வெளிப்படையாக அம்மாநில முதல்வர் விஜய் ரூபாணி தெரிவித்துள்ளார். ஆனால் இது மட்டுமே காரணம் இல்லை.
வெளிநாட்டுக்கு மக்கள்
குஜராத்திற்கு வெளிநாட்டில் இருந்து பிப்ரவரி மார்ச் மாதங்களில் பலர் வந்தனர். டெல்லி மாநாட்டை விட இப்படி வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் மூலம்தான் கொரோனா அங்கு அதிகம் ஏற்பட்டுள்ளது. இவர்களை சரியாக சோதனை செய்யாததும், சரியாக தனிமைப்படுத்தாததும்தான் இதற்கு காரணம் என்று கூறுகிறார்கள். அப்போதே இவர்களை அம்மாநில அரசு சரியாக தனிமைப்படுத்தி இருந்தால் இத்தனை பேருக்கு அங்கு கொரோனா பரவி இருக்காது.
மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சி
அதேபோல் அகமதாபாத்தில் கடந்த பிப்ரவரி 24ம் தேதி அதிபர் டிரம்ப் மற்றும் பிரதமர் மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சி நடந்தது. இதுவும் கூட கொரோனா பரவல் தொடங்கிய பின்தான் நடந்தது. இதன் மூலம் கொரோனா பரவி இருக்குமா என்றும் சிலர் கேள்வி எழுப்பி உள்ளனர். காங்கிரஸ் கட்சி இது தொடர்பாக புகார்களை அடுக்கி வருகிறது. அதே சமயம் கொரோனாவை தீவிரமாக பரப்பும் சூப்பர் ஸ்பிரெட்டர்கள் 334 பேர் அங்கு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பலருக்கு பரவுகிறது
அதாவது வெளிநாடு சென்று வந்தவர்கள், வீட்டில் விழா நடத்தியவர்கள், காய்கறி கடை வைத்து இருந்தவர்கள் என்று 334 பேர் கொரோனாவோடு அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் மூலம் 1800க்கும் அதிகமான நபர்களுக்கு கொரோனா பரவி உள்ளது குறிப்பிடத்தக்கது. அங்கு 14000க்கும் அதிகமாக இதேபோல் சூப்பர் ஸ்பிரெட்டர்கள் இருக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.
குஜராத் இறப்பு
குஜராத்தில்தான் இறப்பு விகிதம் அதிகமாக இருக்கிறது. இதற்கு குஜராத்தில் பரவும் கொரோனா வைரஸின் வகையும் கூட ஒரு காரணமாக இருக்கும் என்று கூறுகிறார்கள். குஜராத்தில் பரவும் கொரோனா சீனாவில் பரவிய அதே எல் (L) வைரஸ் வகை பரவி வருகிறது. இந்த எல் வகை வைரஸ் மிகவும் வலிமை வாய்ந்தது. அமெரிக்கா, ஐரோப்பாவில் பரவும் மற்ற கொரோனா வகைகளை விட அதிக பலம் வாய்ந்தது. இதை குணப்படுத்துவது கொஞ்சம் கடினம்.
கொரோனா வகை என்ன
இதனால்தான் குஜராத்தில் நோயாளிகளை குணப்படுத்துவது மிகவும் கடினமாக இருக்கிறது. நோயாளிகள் வேகமாக பலியாகிறார்கள் என்று குஜராத் மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். ஈரான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் பரவி வரும் கொரோனா எஸ்(S) வைரஸ் வகை ஆகும்.அமெரிக்கா மற்றும் யுனைட்டட் கிங்கிடமில் பரவி வரும் வைரஸ் வகை மூன்று ( எஸ் மற்றும் எல் கலவை) ஆகிய வகைகள் உள்ளது.
மருத்துவ வசதி
அங்கு போதிய மருத்துவமனைகள் இல்லாததும், போதிய எண்ணிக்கையில் சுகாதார மையங்கள் மருத்துவர்கள் இல்லாததும் கூட கொரோனா பரவ அதிக காரணம் என்கிறார்கள். குஜராத் மாடலை பிரபலப்படுத்த செய்த செலவில் கொஞ்சம் பணத்தை மருத்துவமனைக்கு செய்து இருந்தால் இந்த பிரச்சனை வந்து இருக்காது என்றும் கூறுகிறார்கள். அங்கு நிலை போக போக மோசமாகும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.