100 டீம்.. 27 லட்சம் பேர்.. கொரோனாவை வென்ற "பில்வாரா" மாடல்.. மத்திய அரசு களமிறக்கும் மாஸ் திட்டம்
ஜெய்ப்பூர்: கொரோனாவிற்கு எதிராக மத்திய அரசு பில்வாரா மாடலை பின்பற்ற உள்ளது. அது என்ன பில்வாரா மாடல்? கொரோனாவை எதிர்கொள்ள எப்படி உதவும் என்று பார்க்கலாம்!
Recommended Video
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் இருந்து சுமார் 300 கிமீ தூரத்தில் இருக்கும் மாவட்டம்தான் பில்வாரா. தற்போதைய கணக்குப்படி அங்கு 30 லட்சம் மக்கள் இருக்கிறார்கள். அதிகமான நெசவு ஆலைகளை கொண்ட இந்த மாவட்டத்தை, ராஜஸ்தானின் கொங்கு மண்டலம் என்று கூட சொல்லலாம்.
ராஜஸ்தானின் ஜிடிபியில் அதிக பங்கு வகிக்கும் பில்வாரா அம்மாநில மக்களுக்கு பிடித்தமான மாவட்டங்களில் ஒன்று. ஆனால் அந்த மாவட்டம்தான், கடந்த மாதம் அப்பகுதி மக்களுக்கு ஒரு கெட்ட கனவு போல மாறியது. மக்கள் கொஞ்சமும் எதிர்ப்பார்க்காத விஷயங்கள் அங்கே நடக்க தொடங்கியது.
கொரோனா குமார், கொரோனா குமாரி.. புதிதாக பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு பெயரிட்ட ஆந்திர மருத்துவர்கள்
முதல் இடத்தில் இருந்தது
மார்ச் 18ம் தேதி வரை பில்வாராவில் ஒருவருக்கு கூட கொரோனா இல்லை. அங்கு எல்லாம் இயல்பான நிலையில் இருந்தது. ஆனால் மார்ச் 19ம் தேதி முதல் நபருக்கு கொரோனா வந்தது. அவருக்கு எப்படி கொரோனா வந்தது என்று கண்டுபிடிக்கும் முன்பே அடுத்த நாளே 10 பேருக்கு கொரோனா வந்தது. வரிசையாக தினமும் 2-3 பேர் வீதம் கொரோனா பாதித்தது. அதோடு அரசு சுதாரிக்கும் முன்பே அங்கு 2 பேர் பலியானார்கள். மார்ச் 29ம் தேதி அதாவது வெறும் 10 நாளில் அங்கு 27 பேருக்கு கொரோனா ஏற்பட்டது.
ஒரு மருத்துவமனை
இதில் அதிர்ச்சி அளிக்க கூடிய விஷயம் அங்கு ஒரு தனியார் மருத்துவமனைதான். பில்வாராவில் இருக்கும் அந்த பிரபல மருத்துவமனையில் இரண்டு நாட்களில் 17 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. இதில் இரண்டு மருத்துவர்கள், பல நர்ஸுகள், பயிற்சி மருத்துவர்களும் அடக்கம். இதுதான் அம்மாநில அரசை உலுக்கியது. அந்த மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது.
கடுமையான அச்சம்
மக்கள் இடையே அச்சம் பரவ தொடங்கியது. ராஜஸ்தானின் எபிசெண்டர் போல பில்வாரா மாறுமா என்று கேள்வி எழுந்தது. வுஹன் நகரம் போல பில்வாரா மாற போகிறதா என்று கேள்வி எழுந்தது. ஏனென்றால் அங்கு கொரோனாவின் பேஷண்ட் 0 யார் என்று கண்டுபிடிக்கப்பட முடியவில்லை. அதாவது யாரிடம் இருந்து முதலில் கொரோனா பரவியது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. இதை எப்படி தடுப்பது என்று தெரியாமல் அரசுக்கும் குழப்பம் ஏற்பட்டது.
அச்சத்திற்கு காரணம் என்ன
இதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. பில்வாராவில் அந்த கொரோனா பாதிக்கப்பட்ட தனியார் மருத்துவமனையில் பலர் சிகிச்சை பெற்று இருக்கிறார்கள். இதில் பலரின் ஊர், பெயர் தெரியவில்லை. கொரோனா பாதித்த டாக்டர் தன்னுடைய வீட்டிலும் ஓய்வு நேரத்தில் பலருக்கு சிகிச்சை கொடுத்துள்ளார். இவர்கள் எல்லாம் யார் என்று தெரியாததால் கொரோனா பலருக்கு பரவும் அபாயம் ஏற்பட்டது. இதுதான் அரசை அதிகம் அச்சமூட்டிய விஷயம்.
காரணம் இதுதான்
இதையடுத்துதான் அம்மாநில அரசு பில்வாரா மீது கவனம் செலுத்தியது. அவசர மீட்டிங் போட்டது. எப்படியாவது பில்வாராவில் கொரோனா பரவுவதை தடுக்க வேண்டும் என்று முடிவு செய்தது. இரண்டு நாட்கள் நடந்த தொடர் மீட்டிங்கின் முடிவில் 7500 பேர் கொண்ட 100 குழுக்கள் உருவாக்கப்பட்டது. போலீஸ், மருத்துவர்கள், சுகாதார அதிகாரிகள், எம்எல்ஏக்கள், மாணவர்கள் என்று இந்த குழுவில் பலர் இருந்தனர்.
6 அடுக்கு திட்டம் என்ன
இதற்காக 6 அடுக்கு திட்டம் உருவாக்கப்பட்டது. 1. மாவட்டத்தை தனிமைப்படுத்துவது 2.கொரோனா அதிகம் இருக்கும் ஹாட்ஸ்பாட் பகுதியை கண்டுபிடிப்பது. 3. வீடு வீடாக சோதனை செய்வது. 4. மிக கடுமையாக காண்டாக்ட் டிரேசிங் முறை 5. மக்களை தீவிரமாக தனிமைப்படுத்துவது 6. பாதிக்கப்பட்டவர்களை சிகிச்சை அளிப்பது என்ற 6 அடுக்கு பிளான் கொண்டு வரப்பட்டது.
நான்கு லெவல் சோதனை
இதில் கவனிக்க வேண்டிய விஷயம், காண்டாக்ட் டிரேசிங் முறையில் பில்வாரா நான்கு அடுக்கு சோதனை செய்தது. பொதுவாக காண்டாக்ட் டிரெஸ் முறையில் ''ஏ'' என்ற நபருக்கு கொரோனா இருந்தால், அவர் தொடர்பு கொண்ட நபர்களை மட்டும்தான் கண்டுபிடிப்பார்கள். ஆனால் பில்வாராவில் 'ஏ' என்ற நபருக்கு கொரோனா இருந்தால், அவர் தொடர்பு கொண்ட நபர், அந்த நபரை தொடர்பு கொண்ட இன்னொரு நபர் , அவருடைய நண்பர், அந்த நண்பரின் நண்பர் என்று வரிசையாக 4 அடுக்கு காண்டாக்ட் டிரேசிங் செய்யப்பட்டது.
முதலில் 5 கிமீ தூரம்
அதேபோல் ஒரு தெருவில் ஒரு நபருக்கு கொரோனா இருந்தால் அவர் வீட்டை சுற்றி 5 கிமீ தூரத்திற்கு அனைத்து இடங்களுக்கு அதிகாரிகள் செல்வார்கள். வீடு வீடாக சோதனை செய்வார்கள். இதை முதல் காரியமாக 100 குழுக்கள் செய்துள்ளது. இந்த 5 கிமீ தூரத்தில் ஒரே ஒருவருக்கு சிறிய காய்ச்சல் இருந்தாலும், விட்டத்தை மேலும் 3 கிமீ தூரத்திற்கு அதிகரிப்பார்கள். இப்படியாக 3 கிமீ தூரம் அதிகரித்துக் கொண்டே செல்வார்கள்.
வீடாக சென்றனர்
இது முதல் கட்டம்தான். முதல் 4 நாட்களுக்கு பின் இந்த கிமீ கணக்கை கைவிட்டு விட்டு எல்லோருக்கும் சோதனை செய்தனர். மொத்தம் 6 லட்சத்து 50 ஆயிரம் வீடுகளில் இப்படி சோதனை செய்தார்கள். இப்படி ஒரே வாரத்தில் 27 லட்சம் பேர் வீடு வீடாக சென்று சோதனை செய்யப்பட்டார்கள் . கிட்டத்தட்ட அம்மாவட்ட மக்கள் தொகையில் 90% சதவிகிதம் பேர் சோதனை செய்யப்பட்டனர். சிலர் இரண்டு முறை கூட சோதனை செய்யப்பட்டனர். யாரையும் விடவில்லை.
ஹோட்டலில் அடைத்தனர்
இதன் மூலம் கொரோனா அறிகுறி உள்ள 14000 பேர் கண்டுபிடிக்கப்பட்டார்கள். மற்ற மாவட்டங்களில் இது போன்ற நபர்களை வீட்டிலேயே இருக்க சொல்வார்கள். ஆனால் பில்வாரா அங்குதான் தனித்து தெரிந்தது. இவர்களை எல்லாம் மொத்தமாக ஹோட்டல் அறைகளில் தங்க வைத்து கவனித்துக் கொண்டது. 1541 ஹோட்டல்கள் மொத்தமாக இதற்காக புக் செய்யப்பட்டு, தனித்தனி ரூம்களில் சகல வசதிகளோடு அவர்கள் கவனித்துக் கொள்ளப்பட்டனர்.
மொத்தமாக மாவட்டத்தை மூடினார்களா
மற்ற ஊர்களில் எல்லாம் கொரோனா வந்தால் மாவட்டத்தை மட்டும்தான் மூடுவார்கள். ஆனால் பில்வாராவில் எல்லா கிராமங்களையும் மூடினார்கள். யாரையும் வெளியே அனுமதிக்கவில்லை. ஒரு கிராமத்திற்கு 10 போலீஸ் என்று 2500 போலீசுக்கும் அதிகமாக எல்லா கிராமங்களிலும் பகல், இரவு பாராமல் பைக்கில் ரோந்து சென்றார்கள். வடகொரியா போல மிக கடுமையாக ராணுவ கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
அதே சமயம் உணவு
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் மக்களுக்கு உணவுகளை வீடு வீடாக சென்று வழங்கியது. அதிகமான கட்டுப்பாடுகள் இருந்தால் மக்கள் வெளியே வந்து கலவரம் செய்வார்கள் என்று அரசுக்கு தெரியும். இதனால் எல்லோர் வீட்டிற்கும் காய்கறி, உணவுகள் சென்றது. போக போக சப்ளை அதிகரிக்கப்பட்டு மக்கள் வீட்டிற்கு நேரடியாக பழங்கள் எல்லாம் கொண்டு சென்று கொடுக்கப்பட்டது. ஆடு, மாடுகளுக்கு கூட புற்கள் வழங்கப்பட்டது.
இன்னொரு பக்கம் மருத்துவமனை
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் கொரோனா பாதிக்கப்பட்ட 27 பேருக்கும் தீவிர மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த மருத்துவர்கள் 24 மணி நேரமும் நோயாளிகள் அருகே இருந்து கவனித்துக் கொண்டார்கள். உடலுக்கு தொடர்ந்து எதிர்ப்பு சக்தி மருந்துகளை அளித்து வந்தனர். எல்லோருக்கும் தனிப்பட்ட கவனம் 24 மணி நேரமும் அளிக்கப்பட்டது.
எப்படி சாதனை செய்தனர்
இந்த திட்டத்தின், செயல்பாட்டின் முடிவில், புதிதாக யாருக்கும் கொரோனா பரவாமல் தடுக்கப்பட்டது. கடைசி ஒரு வாரத்தில் ஒரே ஒரு நபருக்கு மட்டும் கொரோனா ஏற்பட்டது. அவரும் கூட ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்ட நபர்தான். இதன் மூலம் 27 பேரில் ஏற்கனவே 3 பேர் பலியாகி 17 பேர் குணப்படுத்தப்பட்டு உள்ளனர். 13 பேர் அதில் வீட்டிற்கு திரும்பி உள்ளனர். இன்னும் 7 பேர் ஒரு வாரத்தில் குணப்படுத்தப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.
மத்திய அரசு திட்டம்
மிக கடுமையான திட்டம் மற்றும் செயல்பாடுகள் மூலம் கொரோனாவை பில்வாரா வென்றுள்ளது. வியட்நாம் நாடும் இதேபோல்தான் கொரோனாவை வீழ்த்தியது. தற்போது இந்த பில்வாரா மாடலை நாடு முழுக்க கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கொரோனா மோசமாக தாக்கி இருக்கும் 60 மாவட்டங்களில் முதல் கட்டமாக பில்வாரா திட்டத்தை செயல்படுத்த அரசு திட்டமிட்டு வருகிறது .