காங்கிரஸை (ராகுல் காந்தியிடம் இருந்து) காப்பாற்ற வருவாரா பிரியங்கா?
டெல்லி: நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் பெற்ற படுதோல்வியால் ராகுல் காந்தியின் தலைமைக்கு எதிராக காங்கிரஸ் தொண்டர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். ராகுல் காந்திக்கு மாற்றாக அவரது சகோதரி பிரியங்கா காந்தி, காங்கிரசுக்கு தலைமையேற்க வேண்டும் என்று போஸ்டர் அடித்து ஒட்டிவருகிறார்கள்.
தொட்டதெல்லாம் தோல்வி
காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த ராகுல்காந்தி, துணை தலைவராக பதவி உயர்வு பெற்றார். இன்னொரு வகையில் சொன்னால் போர்த் தளபதியாக பிரகடனப்படுத்தப்பட்டார். ஆனால் அவர் சென்ற இடமெல்லாம் காங்கிரசுக்கு தோல்வியைத்தான் பரிசாக பெற்றுக்கொடுத்தார். இடைத்தேர்தல்களாக இருந்தாலும் சரி, ஐந்து மாநில சட்டசபை தேர்தலாக இருந்தாலும் சரி இதுதான் நடந்தது. "ஓ.. ராகுல்காந்தி பிரச்சாரத்துக்கு வருகிறாரா அப்படியென்றால், எங்களுக்கு வெற்றிதான்" என்று எதிர்க்கட்சிகள் பகிரங்கமாக கேலி செய்யும் அளவுக்கு மாறிப்போனது அவரது பிரச்சார வியூகங்கள். இதன் இறுதிகட்டமாக நாடாளுமன்ற தேர்தலிலும் அத்தோல்வி பூதாகரமாக எதிரொலித்தது.
பவர்ஃபுல் பிரியங்கா
ராகுல்காந்தியின் பிரச்சாரம் நடைமுறைக்கு மாறுபாடாக இருந்ததால் எதிர்க்கட்சிகளால் மட்டுமின்றி சமூக வலைத்தளங்களிலும் கேலிக்கும், கிண்டலுக்கும் உள்ளானது. ஆனால் பிரியங்கா காந்தியின் பிரச்சாரத்தை யாராலும் குறை கூற முடியவில்லை. அமேதி மற்றும் ரேபரேலியில் அவரது பிரச்சாரத்தை பார்த்தவர்கள் இந்திராவின் மறு உருவம் என்று புகழ்ந்தனர். ராகுல்காந்தி அவரது தந்தை ராஜிவ்காந்தியின் குணநலன்களை கொண்டுள்ளார், அதே நேரம் பிரியங்கா தனது பாட்டி இந்திராகாந்தியைப் போன்றவர் என்கிறார்கள் காங்கிரசார்.
பதிலடி
மோடியின் அனல் பறக்கும் பிரச்சாரத்துக்கு தக்க பதிலடி கொடுக்க முடியாமல், "பெண்கள் முன்னேற்றத்துக்கு காங்கிரஸ் பெரிய பங்காற்றியுள்ளது", "இந்த வாட்ச் இராமநாதபுரத்தில் தயாரிக்கப்பட்டது என்று கூறப்பட வேண்டும்" என்பது போன்ற டயலாக்குகளையே திரும்ப திரும்ப பேசி ராகுல்காந்தி தொண்டர்கள் பொறுமையை சோதித்து வந்தார்.
ஆனால் பிரியங்கா பிரச்சாரம் வெட்டு ஒன்னு, துண்டு ரெண்டு மாதிரிதான் இருந்தது. மோடிக்கு பல இடங்களில் சரியான கவுண்டர் கொடுத்தார்.
நழுவல்
ஒரு கட்டத்தில் பிரியங்காவின் தாக்குதலில் இருந்து தப்பிக்க, அவர் என் மகளைப் போன்றவர் என்று கூறி மோடி நழுவிவிட்டார். அப்படியும் விடாத பிரியங்கா, "நான் ராஜிவ்காந்தியின் மகள்" என்று பெருமிதத்துடன் கூறி கதை இன்னும் முடியவில்லை என்று டுவிஸ்ட் கொடுத்தார்.
சகுனம் நல்லாயிருக்கே
ராகுல்காந்தி போன இடமெல்லாம் காங்கிரஸ் தோல்வியடைந்ததால் அவர் மீது ராசியில்லாத நாயகன் என்ற அவப்பெயர் வந்துள்ளது. ஆனால் பிரியங்கா பிரச்சாரம் செய்த அமேதி, ரேபரேலி ஆகிய இரு தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. முதல் பணியிலேயே 100 சதவீதம் வெற்றி பெற்ற திருப்தி பிரியங்கா முகத்திலும், காங்கிரசார் மனத்திலும் காணப்படுகிறது. பிரியங்காவின் ஈர்ப்பு சக்தியை மனதில் கொண்டுதான், அவரை காங்கிரஸ் முன்னிருத்த வேண்டும் என்று உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் போஸ்டர் அடித்து ஒட்டி வருகிறார்கள்.
இனிதான் ஆரம்பம்
காங்கிரஸ் கட்சி பலவீனமாகி உடையும் தருவாயில் இருந்தபோது வேறு வழியில்லாமல் சோனியாகாந்தி அரசியலுக்கு வர வேண்டியதாயிற்று. 2004ல் அக்கட்சி தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது. அதனால் தோல்வியின் விளிம்பில் இருந்து கட்சியை வெற்றிப் பாதைக்கு அழைத்துவரும் சூத்திரம் சோனியாவுக்கு தெரிந்திருந்தது. ஆனால் ராகுல்காந்தி கட்சி பொறுப்பெடுத்தது காங்கிரஸ் அதிகாரத்தில் இருந்த இந்த 10 ஆண்டு காலத்திற்குள்தான்.
சொகுசான இடத்திலேயே இருந்துவிட்டதால் அவருக்கு கட்சியை முன்னேற்ற தெரியவில்லை. மோடியின் அரசுக்கு எதிராக காங்கிரசை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்துவதில்தான் ராகுலின் பணி ஆரம்பிக்கப்போகிறது, ஆனால் ராகுலால் அது முடியாது என்கிறார்கள் காங்கிரஸ் நிர்வாகிகள். எனவேதான், 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை பிரியங்கா காந்தி தலைமையில் சந்திக்க காங்கிரஸ் நிர்வாகிகள் விரும்புவதாக டெல்லி வட்டார தகவல்கள் கூறுகின்றன.