நாளை விண்ணில் பாய்கிறது "ஆஸ்ட்ரோசாட்" செயற்கைகோள்... 50 மணி நேர கவுண்டவுன் தொடக்கம்
ஸ்ரீஹரிகோட்டா: ஆஸ்ட்ரோசாட் செயற்கைகோளை விண்ணில் ஏவுவதற்கு கவுண்டவுன் ஸ்ரீஹரிகோட்டாவில் நேற்று துவங்கியது. திட்டமிட்டபடி அந்த செயற்கை கோள் நாளை காலை 10 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுகிறது.
விண்வெளி ஆய்வுக்கான ஆஸ்ட்ரோசாட் செயற்கைகோளை இஸ்ரோ உருவாக்கியுள்ளது. இந்த செயற்கைகோள் நாளை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி 30 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட உள்ளது. இதற்கான 50 மணி நேர கவுண்டவுன் நேற்று காலை 8 மணிக்கு துவங்கியது.
1513 கிலோ எடையுள்ள இந்த செயற்கைகோள், பூமியில் இருந்து 650 கிலோ மீட்டர் உயரத்தில் சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்படும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். விண்வெளியில் உள்ள புற ஊதா கதிர்கள், அங்கு பரவும் எக்ஸ் ரே கதிர்களின் இயக்கம், விண்மீன்கள், இதர கோள்களின் இயக்கம் உள்ளிட்டவற்றை ஆஸ்ட்ரோ செயற்கைக்கோள் ஆய்வு செய்யும்.
ஆஸ்ட்ரோ செயற்கைக்கோளுடன், அமெரிக்காவின் சிறிய ரக நான்கு செயற்கைக்கோள், இந்தோனேஷியா மற்றும் கனடாவின் ஒரு செயற்கைக்கோளையும் பிஎஸ்எல்வி சி30 சுமந்து செல்ல உள்ளது.
இதுவரை அமெரிக்கா, ஜப்பான், ரஷ்யா ஆகிய நாடுகள் மட்டுமே விண்வெளி ஆய்வுக்கான செயற்கைக்கோளை வெற்றிகரமாக செலுத்தியுள்ளன. ஆஸ்ட்ரோசாட் வெற்றிகரமாக ஏவப்பட்டால், இந்த வரிசையில் நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா பெரும் என்பது குறிப்பிடத்தக்கது.