ஜிஎஸ்எல்வி மார்க் 3 சோதனை வெற்றி – மனிதர்களை அனுப்ப உதவும் ஆளில்லா விண்கலம் வெற்றிகரமாக பிரிந்தது!
ஹைதராபாத்: மனிதனை விண்வெளிக்கு அழைத்துச் செல்லும் வகையிலான ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் இன்று காலை ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
மனிதனை விண்ணுக்கு அனுப்பி மீண்டும் பூமிக்கு அழைத்து வரும் வகையில் அடுத்த தலைமுறைக்கான ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட்டை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் வடிவமைத்து உள்ளனர்.
Live from #Sriharikota launch of GSLV-Mark III in a little while http://t.co/Dlbs9aXXaU
— Doordarshan News (@DDNewsLive) December 18, 2014
இந்த ராக்கெட்டின் மேல்பகுதியில், 3 மனிதர்களை பத்திரமாக விண்ணுக்கு அனுப்பி மீண்டும், பூமிக்கு அழைத்து வரும் வகையில் "கப் கேக்" வடிவிலான ஒரு அறை போன்ற விண்கல அமைப்பை உருவாக்கி உள்ளனர். இது மாதிரி ராக்கெட் தானே தவிர, முழுமையானது அல்ல.
தொழில்நுட்பங்களின் கலவை:
விண்வெளி வீரர்களின் உடல்நிலை மற்றும் தொழில்நுட்பங்களை கணக்கில் கொண்டும் இந்த அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. 3 டன் எடை கொண்ட இந்த அறை 2.7 மீட்டர் உயரமும், 3.1 மீட்டர் சுற்று வட்டமும் கொண்டதாகும்.
கடலில் விழும் வடிவமைப்பு:
ஏவு தளத்தில் இருந்து ஏவப்பட்ட ராக்கெட் 126 கி.மீ உயரத்தை அடைந்ததும், அறை போன்ற விண்கல அமைப்பு ராக்கெட்டில் இருந்து பிரிந்து கடலில் விழுந்து விடும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது.
வெற்றிகர சோதனை:
இன்று காலை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 9.30 மணிக்கு இது வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
126 கிலோ மீட்டர் பயணம்:
இந்த ராக்கெட் விண்ணில் 126 கிலோ மீட்டர் தூரம் வரை சென்றுவிட்டு, அடுத்த 20 ஆவது நிமிடத்தில் வங்காளவிரிகுடா கடல் பகுதியில் பாதுகாப்பாக பாராசூட் மூலம் விழும் வகையில் இது வடிவமைக்கப்பட்டிருந்தது.
தயார் நிலையில் கடற்படை:
சென்னை எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் கடற்படையினர் கடலில் இருந்து விண்கலத்தை மீட்டு மீண்டும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்திடம் வழங்க உள்ளனர்.
நோக்கமே இதுதான்:
இந்த விண்கலத்தை ராக்கெட்டில் அனுப்புவதின் நோக்கமே, மனிதனை ராக்கெட்டில் வைத்து அனுப்புவதற்கான தொழில்நுட்பத்தை தெரிந்துகொள்வதற்காக தான்.
எதிர்ப்பார்ப்பை நனவாக்கிய ராக்கெட்:
இன்று காலை விண்ணில் ஏவப்பட்ட ராக்கெட் சுமார் 126 கி.மீ தூரம் வரை சென்ற பிறகு, மனிதன் பயணிப்பதற்கான மாதிரி விண்கலம் மட்டும் சுமார் 19 ஆவது நிமிடத்தில் திட்டமிட்டபடி அந்தமான் அருகே கடலில் விழுந்தது.
பரிசோதனை முயற்சி மட்டுமே:
இது பரிசோதனை முயற்சி என்பதால் ராக்கெட்டில் உள்ள முதல் இரு நிலைகள் மட்டும் சோதித்துப்பார்க்கப்பட்டுள்ளது. 3 ஆவது நிலையான "கிரையோஜெனிக்" என்ஜின் சோதனை நிலை இதில் இடம் பெறவில்லை.
ஆய்வு தொடரும்:
கடலில் இருந்து மீட்கப்படும் விண்கலம் ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
மொத்த செலவு 155 கோடி:
இந்த ராக்கெட்டை வடிவமைக்க ரூபாய் 140 கோடியும், விண்வெளி வீரர்கள் அமரும் அறை போன்ற அமைப்பை உருவாக்க ரூபாய் 15 கோடியும் சேர்த்து ரூபாய் 155 கோடி செலவிடப்பட்டு உள்ளது.
மத்திய அரசு ஒப்புதல்:
ஆனால் மனிதனை விண்ணுக்கு அனுப்புவதற்கான முறையான அனுமதியை மத்திய அரசு இதுவரை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வரும் காலங்களில் மனிதர்களை அனுப்ப வேண்டிய சூழ்நிலை ஏற்படும் போது, இதுபோன்ற தொழில் நுட்பம் கைகொடுக்கும்.
4 ஆவது நாடாக பெருமை:
இந்நிலையில் இந்த சோதனை வெற்றி பெற்றதை அடுத்து அமெரிக்கா, ரஷ்யா, சீனா நாடுகளின் வரிசையில் 4 ஆவது இடத்தை இந்தியா பிடித்துள்ளது. அத்துடன், அதிகமான எடை கொண்ட விண்கலத்தை விண்ணில் அனுப்பிய பெருமையையும் இந்தியா பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடி வாழ்த்து:
ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட்டினை வெற்றிகரமாக விண்ணில் ஏவிய விஞ்ஞானிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய விஞ்ஞானிகளின் கடின உழைப்பு மற்றும் திறமைக்கு கிடைத்த வெற்றி இது என்று பாராட்டி உள்ளார்.