திருவனந்தபுரத்தில் 2000 ரூபாய் கள்ள நோட்டு மாற்றியவர்கள் கைது
கள்ள நோட்டை புழக்கத்தில் விட முயன்ற மூன்று பேர் திருவனந்தபுரத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
திருவனந்தபுரம் : கேரளாவில் கள்ள நோட்டை புழக்கத்தில் விட முயன்ற மூன்று பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கோட்டயம் அருகே அடிமணலியில் உள்ள உணவு விடுதிக்கு இரண்டு பெண்கள் உள்பட மூன்று பேர் வந்துள்ளனர். அங்கு அவர்கள் சாப்பிட்டுவிட்டு அதற்கான பில்லுக்கு ரூ.2 ஆயிரம் கொடுத்துள்ளனர்.
பின்னர் மீதியை வாங்கிக்கொண்டு அங்கிருந்து காரில் ஏறி கிளம்பிச் சென்றனர். ஆனால், அவர்கள் சென்ற பிறகே அவர்கள் கொடுத்தது போலி 2000 ரூபாய் நோட்டு என்று தெரிய வந்தது.
இதனையடுத்து ஹோட்டல் உரிமையாளர் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். உடனே போலீசார் சம்பவம் இடம் சென்று விசாரணை நடத்தினர். வயர்லெஸ்சில் அனைத்து செக்போஸ்டுகளும் உஷார்படுத்தப்பட்டது.
இந்நிலையில், அந்தக் கார் தலக்கோடி வனத்துறை சோதனைச் சாவடி அருகே வந்த போது போலீசார் அதிரடியாக மடக்கினர். அந்த காரில் சோதனை நடத்திய போது ரூ.7.5 லட்சம் இருப்பது தெரிய வந்தது.
இதில் ரூ.22 ஆயிரம் கள்ள நோட்டுகள் என்பதும் தெரிய வந்தது. காரில் இருந்தவர்கள் கொல்கத்தாவை சேர்ந்த சுவர்ண சேக், சஹூன் என்ற பெண்களும், கோட்டயம் பொன் குன்னத்தை சேர்ந்த அனுப் என்ற வாலிபரும் என்பது விசாரணையில் தெரிந்தது.
உடனடியாக அவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து கள்ள நோட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த கள்ள நோட்டு எங்கிருந்து வந்தது என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.