நாடு ஏற்கனவே பணம் இல்லாமல் தான் இருக்கிறது: மோடிக்கு, கபில் சிபல் பதில்
ரூபாய் நோட்டு விவகாரத்தில் மோடியின் நடவடிக்கைக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல் கண்டனம் தெரிவித்துள்ளார்.
டெல்லி: மின்னணு பணப்பரிவர்த்தனைகளை அதிகம் மேற்கொண்டு நாம் ரொக்கப் பணப் புழக்கமற்ற (cashless) சமூகமாக மாறவேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தி வருகிறார். இதற்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் வானொலி மூலம் உரையாற்றினார். அப்போது மக்கள் பண பரிமாற்றம் இல்லாத மின்னணு பண பரிவர்த்தனைக்கு மாற வேண்டும் என்று வலியுறுத்தினார். இதற்கு கட்டணம் தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபில், நாட்டிலேயே பணம் இல்லை.. 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் மாற்றம், பணமில்லா பரிவர்த்தனைக்கான எந்தவொரு முன்னேற்பாடும் செய்யாத நிலையில், எப்படி இந்த சமூகம் மாறும் ?
முதலில் முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும். நம் நாட்டில் 70 கோடி மக்கள் மாதத்துக்கு ரூ. 10 ஆயிரம் சம்பாதிக்கும் அளவிலேயே இருக்கிறார்கள். அவர்கள் அந்தப் பணத்தை வங்கிகளில் டெபாசிட் செய்வதில்லை. அவர்கள் என்ன செய்வார்கள்?. நாடு முழுவதும் ஏடிஎம்கள் மூடிக்கிடக்கின்றன.
வங்கிகள், வங்கிக் கிளைகள் பூட்டிக் கிடக்கின்றன. பணத்துக்காக மக்கள் 20 கிலோ மீட்டருக்கும் மேல் அலைய வேண்டியிருக்கிறது. மக்களிடம் செலவுக்குக் கூட பணம் இல்லை. நம் நாடு ஏற்கனவே பணமில்லா சமூதாயமாக மாறிவிட்டது. இவ்வாறு கபில் சிபல் கூறினார்.