ஹரியானா அமைச்சராக பொறுப்பேற்ற இந்தியாவின் பணக்கார பெண்
சன்டிகர்: நாட்டின் பணக்காரப் பெண்ணான சாவித்ரி ஜிந்தால் ஹரியானா மாநில அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.
நாட்டின் பணக்காரப் பெண் சாவித்ரி ஜிந்தால். ஹரியானா மாநிலம் ஹிசார் தொகுதியில் இருந்து அம்மாநில சட்டசபைக்கு தேர்வான அவர் லோக்சபா உறுப்பினர் நவீன் ஜிந்தாலின் தாய். சாவித்ரி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். இந்நிலையில் அவரை ஹரியானா முதல்வர் புபிந்தர் சிங் ஹூடா அமைச்சர் ஆக்கியுள்ளார்.
முன்னதாக அவர் 2005ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை ஹூடா அரசில் அமைச்சராக இருந்தார். இந்நிலையில் தற்போது இரண்டாவது முறையாக ஹூடா அமைச்சரவையில் உறுப்பினராகியுள்ளார்.
ஜிந்தால் குழுமத்தின் தலைவரான சாவித்ரி இந்தியாவின் பணக்கார பெண் மட்டும் அல்ல. உலகின் 100 பணக்காரர்கள் பட்டியலிலும் அவரது பெயர் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சாவித்ரி இன்று அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருடன் நூ தொகுதியைச் சேர்ந்த அப்தாப் அகமதுவும் அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். ஹூடாவின் அமைச்சரவையில் இருக்கும் ஒரே முஸ்லிம் அப்தாப் அகமது தான்.