கோத்ரா ரயில் எரிப்புக்கு பிந்தைய படுகொலை வழக்கில் இருந்து 6 பேர் விடுவிப்பு
அகமதாபாத்: குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்கு பின்பு 4 பேர் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் இருந்து 6 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
2002ஆம் ஆண்டு குஜராத்தின் கோத்ராவில் கரசேவகர்கள் பயணித்த ரயில் எரிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து குஜராத் முழுவதும் முஸ்லிம்கள் மீது கொடூர இனவெறித் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக ரயில் எரிப்புக்கு மறுநாள் சபர்கந்த் மாவட்டத்தில் பிரிட்டனைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் சையத் தாவூத், ஷகீல் தாவூத், முகமது அஸ்வத், உள்ளூர் ஓட்டுநர் யூசூப் சுலைமான் ஆகியோர் எரித்துக் கொல்லப்படனர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு குஜராத் சிறப்பு புலனாய்வுக் குழுவின் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இவ் வழக்கில் 81 சாட்சியங்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இவர்களில் 3 நேரடி சாட்சியங்கள் பிறழ் சாட்சியமாக மாறினர்.
இதையடுத்து இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட மிதன்பாய் படேல், சந்து, பிரஹலாத் படேல், ரமேஷ் படேல், மனோஜ் படேல், ராஜேஷ் படேல், காலாபாய் படேல் உட்பட 6 பேரை வழக்கிலிருந்து விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.