டுவிட்டரில் விநாயகரை அவமதித்த விவகாரம்... ராம்கோபால் வர்மா மீது மும்பை கோர்ட்டில் வழக்கு
மும்பை: இந்துக்கடவுளான விநாயகரை சர்ச்சைக்குரிய விதத்தில் விமர்சித்ததாக பிரபல இயக்குநர் ராம்கோபால் வர்மா மீது மும்பை கோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இந்துக்களால் முழு முதல் கடவுளாக வழிபடக்கூடியவர் விநாயகர். எந்த செயலை தொடங்கினாலும், முதலில் விநாயகரை வழிபட்ட பின்னரே மற்ற தெய்வங்களை வணங்குவதை இந்துக்கள் வழக்கமாக கொண்டு உள்ளனர்.
இந்நிலையில், சமீபத்தில் விநாயகர் சதுர்த்திக் கொண்டாடப்பட்டது. அப்போது அனைவரும் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டிருக்க பிரபல இயக்குநர் ராம்கோபால் வர்மா, தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்த கருத்து பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.
ராம்கோபால் வர்மாவின் விமர்சனத்திற்கு எதிராக கண்டனக் குரல்கள் எழுந்துள்ள நிலையில், இன்டஸ் கம்யூனிகேசன் நிர்வாக இயக்குனர் சேத்தி நேற்று மும்பை கோர்ட்டில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
அவமானப் படுத்தும் செயல்...
விநாயகரை பற்றி ராம் கோபால் வர்மா தனது டுவிட்டரில் கூறியுள்ள வாசகம் இந்துக்களை அவமானப்படுத்துவது போல் உள்ளது. அவரது செயல் இந்துக்கள் மனதை புண்படுத்தியுள்ளது.
கேலி...
‘‘தனது தலையை காப்பாற்ற முடியாத விநாயகர் எப்படி மற்றவர்களை காப்பாற்றுவார்'' என்று கேலி செய்து உள்ளார்.
நடவடிக்கை தேவை...
குற்றவியல் பிரிவு 295-ஏ, 504, 505 ஆகிய பிரிவின் கீழ் அவர் குற்றம் புரிந்தவராக உள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இந்த மனுவானது விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
சர்ச்சை நாயகன்...
ஏற்கனவே ராம்கோபால் வர்மா இந்து கடவுள்களான சிவன், லட்சுமி, சரஸ்வதியை அவமானப்படுத்தி கருத்து வெளியிட்டுள்ளார். சிவனை பற்றி,‘‘பாலாகனின் தலையை கொய்த சிவன் அல்கொய்தா தீவிரவாதியை விட கொடுமைக்காரர்'' என ராம்கோபால் வர்மா கூறியது தொடர்பாக அவர் மீது ஏற்கனவே புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.