2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் தீர்ப்பு தேதி மீண்டும் ஒத்திவைப்பு.. டிச.5ல் தேதி வெளியாகிறது
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் இன்று தீர்ப்பு தேதி வெளியாகவுள்ளதாக டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிபதி ஓ.பி. ஷைனி தீர்ப்பு தேதியை டிசம்பர் 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.
முந்தைய காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கி வழங்கியதில் ரூ.1.70 லட்சம் கோடி முறைகேடு நடந்துள்ளதாக முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி ஆகியோரது மீது குற்றச்சாட்டு எழுந்தது.
டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் 6 வருடங்களாக நடைபெற்று வந்த இந்த வழக்கின் தீர்ப்பு தேதி இன்று அறிவிக்கப்பட உள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு தேதியை நாடே உற்று நோக்கி காத்துக் கொண்டிருக்கிறது.
இறுதி வாதங்கள், விசாரணைகள் முடிந்த நிலையில் கடந்த ஜூலை 15-ஆம் தேதி தீர்ப்பு தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்த்திருந்த வேளையில் அந்த தேதி செப்டம்பர் 20-ஆம் தேதி ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து அன்றும் சில காரணங்களுக்காக அக்டோபர் 25-ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி ஓ.பி.ஷைனி அறிவித்தார்.
ஆனால் சில ஆவணங்களை தயார் செய்ய வேண்டி இருப்பதால் தீர்ப்பு தேதி நவம்பர் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இன்றாவது தீர்ப்பு தேதி வெளியாகுமா என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வரும் டிசம்பர் 5-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தீர்ப்புகள் தயார் செய்ய இன்றும் 3 வாரங்கள் தேவைப்படுகிறது என்பதால் தீர்ப்பு தேதி ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதி தெரிவித்தார்.