பாலியல் பலாத்காரம் பற்றி சர்ச்சைக்குரிய கருத்து... முலாயம் சிங் நேரில் ஆஜராக நீதிமன்றம் சம்மன்
லக்னோ : ஒரு பெண்ணை கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்வது சாத்தியமற்றது என்று சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்து தொடர்பாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் நேரில் ஆஜராக வேண்டும் என்று சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உத்தரபிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாடி கட்சியின் தலைவருமான முலாயம் சிங் அவ்வபோது சர்ச்சை குறிய கருத்துகளில் கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் லக்னோவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய முலாயம் சிங் யாதவ், கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்வது நடைமுறையில் சாத்தியமில்லை என்றும், நான்கு பேர் சேர்ந்து பலாத்காரம் செய்வது என்பது எப்படி நடக்க முடியும் என்றும் கூறினார்.
முலாயம் சிங் இவ்வாறு கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரது இந்த கருத்துக்கு பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.அவரது பேச்சுக்கு பாஜகவைச் சேர்ந்த ஷாசியா இல்மி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் ஷோபா ஓஜா இதுபோன்ற பேச்சுக்கள்தான் சமூக விரோதிகளுக்கு ஊக்கம் தருவதாக அமைந்துள்ளது என்று கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.
இந்த நிலையில், உத்தரபிரதேசத்தில் குல்பகாத் சிவில் நீதிமன்றம் இந்த விவகாரத்தை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டு தாமாக வழக்கு ஒன்றை பதிவு செய்து உள்ளது.
முலாயம் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக அடுத்த மாதம் 16 ஆம் தேதி ஆஜராகுமாறு முலாயம் சிங்குக்கு சம்மன் அனுப்ப நீதிபதி அங்கித் கோயல் உத்தரவிட்டுள்ளார்.