காந்தி கொலை பற்றி கருத்து: ராகுல் காந்தி ஆஜராக கோர்ட் சம்மன்!
டெல்லி: மகாத்மா காந்தியின் படுகொலையில் ஆர்.எஸ்.எஸ்.க்கு தொடர்பு என்று பேசியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அக்டோபர் 7-ந் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக ராகுல்காந்திக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
லோக்சபா தேர்தலின் போது மார்ச் மாதம் 6-ந் தேதி மகாராஷ்டிரா மாநிலம் பிவாண்டியில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி கலந்து கொண்டு பேசினார். அந்த கூட்டத்தில், மகாத்மா காந்தியை ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் சுட்டுக் கொன்றுவிட்டு, இப்போது தேர்தல் பிரசாரத்துக்கு காந்தியின் பெயரை பயன்படுத்துகிறார்கள் என்றார்.
ராகுல்காந்தியின் இந்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். அத்துடன் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் ராகுல் காந்தி மீது பிவாண்டி நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தனர்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அக்டோபர் மாதம் 7-ந் தேதி ராகுல் காந்தி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் பிறப்பித்தார்.