நிலக்கரி வழக்கு: நவ்பாரத்துக்கு எதிரான விசாரணையைத் தொடர சிபிஐ-க்கு கோர்ட் அறிவுறுத்தல்!
டெல்லி: நவ்பாரத் பவர் தனியார் நிறுவனம் மற்றும் அதன் அதிகாரிகள் தொடர்பான நிலக்கரி சுரங்க முறைகேடு விசாரணையை மேலும் விசாரிக்க சிபிஐ-க்கு சிறப்பு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் நவ்பாரத் பவர் தனியார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஹரிஷ் சந்திர பிரசாத், மற்றும் நிறுவனத் தலைவர் பி.திரிவிக்ரம பிரசாத் ஆகியோர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது.
ஆனால் சிபிஐ தாக்கல் செய்த கூடுதல் குற்றப்பத்திரிகையில் அரசு ஊழியர்களுக்கு முறைகேட்டில் தொடர்பில்லை என்று தெரிவித்திருந்தது.
இதை சிறப்பு நீதிமன்றத்தில் உச்ச நீதிமன்றத்தினால் நியமிக்கப்பட்ட சிறப்பு அரசு வழக்கறிஞர் ஆர்.எஸ்.சீமா ஏற்க மறுத்தார். இவர்கள் சட்ட விரோதமாக நவ்பாரத் நிறுவனத்திற்கு நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கியதாக அவர் குற்றம்சாட்டினார்.
பின்னர் விசாரணையை தொடர்ந்து நடத்தி, அதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை டிசம்பர் 16-ந் தேதி நீதிமன்றத்தில் பதிவு செய்ய சிபிஐ-க்கு சிறப்பு நீதிமன்ற நீதிபதி பாரத் பராசர் உத்தரவிட்டார்.