'சாய்பாபா' மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை தேவை: பிரதமர் மோடிக்கு உறவினர் கடிதம்
நகரி: சாய்பாபா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு உறவினர் ஒருவர் கடிதம் அனுப்பியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் புட்ட பர்த்தி சத்ய சாய்பாபா கடந்த 2011-ம் ஆண்டு ஏப்ரல் 24-ந்தேதி காலமானார். அவரது மரணத்தில் பல மர்மங்கள் இருப்பதாகவும் இதுபற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவரது உறவினர் கணபதி ராஜு மத்திய மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளார்.
இதுபற்றி அவர் பிரதமர் நரேந்திர மோடி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோருக்கு கடிதம் அனுப்பி உள்ளார். இது குறித்து ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் கணபதிராஜு கூறியதாவது:
சத்ய சாய்பாபா மரணத்தில் பல சந்தேகங்கள் உள்ளன. அதனை தெளிவுபடுத்த வேண்டும் என்று ஆதாரங்களுடன் கடந்த ஆட்சியின் போது அப்போதைய முதல்வரிடம் புகார் செய்தேன். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை.
பாபா மரணத்தில் பல சதி திட்டங்கள் நடந்து உள்ளது. பாபா இறந்து 25 நாட்கள் கழித்துதான் அவரது மரண செய்தி அறிவிக்கப்பட்டது.
இடைப்பட்ட காலத்தில் அவரது ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் கடத்தப்பட்டு உள்ளன. இதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. சத்ய சாய்பாபா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தினால் உண்மைகள் வெளிவரும்.
எனவே இதுகுறித்து பிரதமர் மோடி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கும் கடிதம் அனுப்பி உள்ளேன். அதில் எனது ஆதாரங்களையும் இணைந்து உள்ளேன்.
இவ்வாறு கணபதிராஜூ கூறினார்.