அடடே.. தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அத்தை மகள் நளினி இப்போ கேரள தலைமைச் செயலாளர்!
திருவனந்தபுரம்: கேரள தலைமைச் செயலாளராக நளினி நெட்டோவை நியமிக்க முதல்வர் பினராய் விஜயன் தலைமையிலான அமைச்சரவை ஒருமனதாக தீர்மானித்துள்ளது. நளினி, தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனின் அத்தை மகள் என்பது இதில் சிறப்பு.
தென்கோடி மாநிலங்கள் இரண்டின் உயர் அரசு அதிகாரிகள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருப்பது இதுதான் முதல் முறை என்கிறார்கள் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் வட்டாரத்தில்.
மாநிலத்தின் அனைத்து வகையான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகளின் தலைவராக விளங்குபவர் தலைமைச் செயலாளர்தான். முதல்வருக்கு ஈடான பலம் கொண்ட இந்த பதவியில் கிரிஜா வைத்தியநாதன் கடந்த ஓ.பி.எஸ் ஆட்சியின்போது டிசம்பர் 22ம்தேதி நியமிக்கப்பட்டார்.
பாஜகவை சேர்ந்தவரும், நடிகருமான, எஸ்.வி.சேகரின் சகோதரர் மனைவிதான் கிரிஜா வைத்தியநாதன் என்பதால் இந்த நியமனத்தில் மத்திய அரசின் கைவண்ணம் இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் திறமை மற்றும் பணி மூப்பு அடிப்படையில் கிரிஜா வைத்தியநாதன்தான் தலைமைச் செயலாளருக்கு தகுதியானவர் என அதிகாரிகள் மட்டத்தில் பேச்சு உள்ளது.
இந்நிலையில் கேரள அமைச்சரவை புதிய தலைமைச் செயலாளராக மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி நளினி நெட்டோவை நியமித்துள்ளது. தற்போதைய தலைமைச் செயலாளர் எஸ்.எம்.விஜய் ஆனந்த்தின் பதவிக்காலம் நாளையோடு நிறைவடைய உள்ளநிலையில் புதிய தலைமைச் செயலாளராக நளினி நெட்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏப்ரல் 1ம் தேதி நளினி நெட்டோ பதவியேற்க உள்ளார். நாகர்கோவிலை சேர்ந்த ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் எஸ்.வெங்கிடராமனின் மகள்தான் கிரிஜா வைத்தியநாதன். வெங்கிடராமனின் சகோதரி மகள்தான், நளினி நெட்டோ. அதாவது கிரிஜா வைத்தியநாதனின் அத்தை மகள். அந்த வகையில் எஸ்.வி.சேகருக்கு நளினி சகோதரி முறையாகும்.