கொரோனா தனிமையில் குழந்தையை கடித்த விஷப்பாம்பு... போராடி உயிரைக்காப்பாற்றிய ஜினில் மேத்யூ
கொரோனா காலத்தில் சில நிஜ ஹீரோக்களை உலகம் அறிமுகப்படுத்திக்கொண்டுதான் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒருவர்தான் ஜினில் மேத்யூ.
காசர்கோடு: ஜினில் மேத்யூ கோவிட் ஹீரோவாக காசர்கோடு மாவட்டத்தில் கொண்டாடப்படுகிறார். காரணம் அவர் செய்த அற்புதமான செயல்தான். கொரோனா காலத்தில் சில நிஜ ஹீரோக்களை உலகம் அறிமுகப்படுத்திக்கொண்டுதான் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒருவர்தான் ஜினில் மேத்யூ. பாம்பு கடிக்கு ஆளான பச்சைக்குழந்தையை போராடி உயிரைக்காப்பாற்றியிருக்கிறார். இதில் என்ன ஹீரோயிசம் என்று கேட்கிறீர்களா? அந்த குழந்தை தனது குடும்பத்தினருடன் வீட்டுத்தனிமையில் இருந்தது.
ராத்திரி நேரத்தில் டின்னரை முடித்து விட்டு வீட்டில் ரெஸ்ட்டில் இருந்த ஜினில் மேத்யூவின் காதுகளில் அழுகைச்சத்தம் கேட்டது. இந்த நேரத்தில் யார் அழுவது என்று எட்டிப்பார்த்த போது அழுகைச்சத்தம் பக்கத்து வீட்டில் இருந்து கேட்டது. ஏன் எதற்காக இந்த அழுகை என்று வேகமாக ஒடிப்போய் அந்த வீட்டின் கேட்டை திறந்து கேட்ட போதுதான் விபரீதம் புரிந்தது. ஒன்றரை வயது குழந்தையை பாம்பு கடித்து விட்டது என்று பெற்றோர்கள் அழுது கொண்டே சொன்னார்கள்.
அழுகை சத்தம் கேட்டாலும் அக்கம்பக்கத்தினர் யாரும் அந்த வீட்டிற்குக்குள் போக தயாராக இல்லை. காரணம் அந்த குடும்பத்தினர் சமீபத்தில்தான் பீகாரில் இருந்து திரும்பியிருந்தார்கள். கொரோனா தொற்று பரவாமல் தடுக்க அவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்கள்.
உலக அளவில் கொரோனா உடன் போராடி மீண்ட 99.7 லட்சம் பேர் - 1.61 கோடி பேர் பாதிப்பு
ஆம்புலன்ஸ்சில் பறந்த குழந்தை
ஜினில் எதைப்பற்றியும் யோசிக்கவேயில்லை. வீட்டிற்குள் கிடுகிடுவென ஓடினார், பாம்பை அடித்து கொன்று விட்டு பிள்ளையை தூக்கினார். போனை எடுத்து ஆம்புலன்ஸ்க்கு பேசினார். ஆம்புலன்ஸ் பறந்து வந்தது. உடனே குழந்தையோடு ஆம்புலன்ஸ்க்குள் புகுந்தார். காசர்கோடில் இருந்து கன்னூருக்கு பறந்தது அங்குள்ள பரியாரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் போய் நின்றது ஆம்புலன்ஸ்.
குழந்தையின் சிரிப்பு
நடந்த விபரீதம் புரியாத அந்த பிஞ்சு குழந்தை சிரித்துக்கொண்டே இருந்தது. இத்தனைக்கும் அந்த குழந்தை ஜினிலை அப்போதுதான் முதன் முறையாக பார்க்கிறது. குழந்தையை அணைத்து பிடித்தவாறே மருத்துவமனைக்குள் இறங்கி ஓடினார். ஏற்கனவே மருத்துவ குழு தயாராக இருந்தது. உடனடியாக குழந்தையை ஐசியூவில் அட்மிட் செய்தனர்.
குழந்தைக்கு கொரோனா
எல்லாமே சடசடவென நடந்ததால் அந்த குழந்தையை காப்பாற்ற முடிந்தது. குழந்தையை அதிக விஷமான பாம்பு கடித்திருந்தது என்றாலும் ஜினில் எடுத்த அதிரடி நடவடிக்கைகளால் அந்த பிள்ளையின் உயிர் காப்பாற்றப்பட்டிருக்கிறது. அந்த குழந்தையின் ரத்தத்தை பரிசோதனை செய்த போது கொரோனா தொற்று உறுதியாகியிருந்தது.
குழந்தையின் பெற்றோர்கள்
குழந்தையை ஜினில் மருத்துவமனைக்கு கொண்டு போன பின்னர் பதறித்துடித்த பெற்றோர்களை யாருமே மருத்துவமனைக்கு அழைத்துப்போக தயாராக இல்லை காரணம் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். அந்த நேரத்தில் வைசாக், ஆல்பின் இரண்டு பேரும் காரை ஏற்பாடு செய்து அழுது கொண்டிருந்தவர்களை மருத்துவமனைக்கு அழைத்துப்போயிருக்கிறார்கள். இப்போது அவர்களும் தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.
பெற்றோர் நெகிழ்ச்சி
தங்களின் பிள்ளையை காப்பாற்றுவதற்காகவே அந்த கடவுள்தான் ஜினிலை அனுப்பி வைத்திருக்க வேண்டும் என்று கண்ணீர் மல்க கூறுகிறார்கள் அந்த பிள்ளையின் பெற்றோர்கள். எங்க குழந்தையை பாம்பு கடித்ததை பார்த்து எங்களால் அழத்தான் முடிந்தது. எங்க அழுகைச்சத்தம் கேட்டு ஓடி வந்த ஜினில் உடனே பிள்ளையை கையில் எடுத்துக்கொண்டு ஆம்புலன்ஸ்சில் ஏறியதைப் பார்த்த உடனே அந்த நொடியே நாங்கள் உணர்ந்து விட்டோம் எங்கள் பிள்ளையைக் காப்பாற்ற கடவுளால் அனுப்பப்பட்டவர்தான் இவர் என்று நெகிழ்கிறார்கள்.
உயிரோடு மீண்ட குழந்தை
அந்த குழந்தையின் பெற்றோர்கள் இருவருமே பீகாரில் ஆசிரியர்களாக வேலை செய்கின்றனர். சமீபத்தில்தான் பீகாரில் இருந்து மூன்று குழந்தைகளுடன் கேரளாவிற்கு திரும்பியிருக்கிறார்கள். வீட்டுத்தனிமையிர் இருந்த போதுதான் மூன்றாவது குழந்தையை பாம்பு கடித்து உள்ளது. இப்போது அந்த குழந்தையோடு அம்மாவும் ஐசியுவில் இருக்க, அப்பாவோ, இரண்டு குழந்தைகளுடன் வீட்டுத்தனிமையில் இருக்கிறார்.
கோவிட் ஹீரோ
குழந்தையைக்காப்பாற்றிய ஜினிலுக்கும் மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள். மூத்த குழந்தை பத்தாவது, இரண்டாவது குழந்தை 5வது படிக்கிறார். கடைக்குட்டியோ இப்போதுதான் ஒன்றாம் வகுப்பு படிக்கிறாள். வட்டக்காயம் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளராகவும் இருக்கிறார் ஜினில். கொரோனா தனிமையில் இருந்த குழந்தையை தொட்டு தூக்கியதால் ஜினிலும் தனது வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு இருக்கிறார்.கோவிட் காலத்தில் குழந்தையை மீட்ட ஜினில் ஹீரோவாக கொண்டாடப்படுகிறார்.