எவரெஸ்ட் மலை சிகரத்தையும் விட்டு வைக்காத கொரோனா - மலையேற்ற வீரருக்கு தொற்று உறுதி
எவரெஸ்ட் சிகரத்தில் மலை ஏற்றத்தில் ஈடுபட்டிருந்த நார்வே நாட்டை சேர்ந்த மலையேற்ற வீரருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
காத்மண்டு: எவரெஸ்ட் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த நார்வே நாட்டை சேர்ந்த மலையேற்ற வீரர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். மலைமுகட்டில் சிக்கி தவித்து வந்த அவரை ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு காத்மாண்டுவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உலகிலேயே மிகப்பெரிய மலைச்சிகரமாக இமயமலையில் உள்ள எவரெஸ்ட் மலைச் சிகரம் நேபாள நாட்டில் அமைந்துள்ளது. இந்த மலைச் சிகரத்தை எட்டி சாதனை படைக்க நாள்தோறும் ஏராளமான மலையேறும் வீரர்கள் முயன்று வருகின்றனர்.
கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக எவரெஸ்ட் மலைச்சிகரம் ஏற நேபாள அரசு தடை விதித்தது. இதனையடுத்து அந்த நாட்டின் சுற்றுலா வருமானம் பாதிக்கப்பட்டது. பல லட்சம் பேர் வேலையிழந்தனர்.
கட்டுக்கடங்காமல் செல்லும் கொரோனா.. மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை.. மீண்டும் முழு லாக்டவுன்?
நேபாள அரசு அனுமதி
பொருளாதார இழப்பை சீர்செய்ய வேண்டி இருப்பதால், மலையேற்றம் உள்ளிட்ட சாகச பயணங்களுக்கு கடந்த நவம்பர் மாதம் நேபாள அரசு மீண்டும் அனுமதி அளித்தது. சுற்றுலாத் துறையின் வருவாய் பாதிப்பை கருத்தில் கொண்டு சிகரங்கள் மற்றும் மலையேற்ற சாகச பயணங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எவரெஸ்ட் கொரோனா பரிசோதனை
கொரோனா இரண்டாவது அலை உலகம் முழுவதும் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. எவரெஸ்ட் மலையேற்றத்திற்கு வருபவர்கள் நேபாளம் நாட்டிற்கு வருவதற்கு 72 மணி நேரத்திற்கு முன் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனை சான்றிதழை உடன் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. நேபாளத்திற்கு வந்த பிறகு, சுற்றுலாப் பயணிகள் தங்கள் சொந்த செலவில் மற்றொரு கொரோனா பரிசோதனையை நடத்தவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
எவரெஸ்ட் ஏறும் வீரர்கள்
நேபாளத்தில் கொரோனா தொற்று பரவலாக இருந்தாலும் மலையேற்ற வீரர்களை ஈர்க்கும் வகையில் கட்டுப்பாட்டுகள் தளர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஏராளமான மலையேற்ற வீரர்கள் எவரெஸ்ட் சிகரத்தில் மலையேற்றத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நார்வே வீரருக்கு கொரோனா
இந்த நிலையில் எவரெஸ்ட் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த நார்வே நாட்டை சேர்ந்த மலையேற்ற வீரர் நெஸ் என்பவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டு மலைமுகட்டில் சிக்கி தவித்து வந்தார் அவரை ஹெலிகாப்டர் மூலம் மீட்டு காத்மாண்டுவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
நலமாக இருக்கிறேன்
கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் தற்போது மருத்துவமனையில் நலமுடன் இருப்பதாகவும் அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மலைச்சிகரங்களில் வேறு யாரும் கொரோனாவால் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று நம்புவதாகவும் கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்டது எப்படி
அதிக உயரம் கொண்ட மலைச்சிகரத்தில் ஏறும் போது நோய் தொற்று ஏற்பட்டால் சுவாசிப்பது கடினம் அது அனைவருக்குமே ஆபத்தாக முடியும் நான் கவனக்குறைவாக இருந்து விட்டேன் என்றும் கொரோனா பாதிக்கப்பட்டுள்ள நார்வே நாட்டு மலையேற்ற வீரர் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்
இதனிடையே காத்மண்ட் மருத்துவமனை இயக்குநர் பிரதீபா பாண்டே, எவரெஸ்ட் மலையேறியவர்களில் சிலருக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதியானதாக கூறியுள்ளார். அதே நேரத்தில் இதனை மறுத்துள்ள நேபாள சுற்றுலா துறை செய்தித் தொடர்பாளர் மீரா ஆச்சார்யா, மலை ஏறுபவர்களில் கோவிட் தொற்று பாதிக்கப்பட்டவர்கள் பற்றி தகவல் வெளியாகவில்லை என்று கூறியுள்ளார். நிமோனியா பாதிக்கப்பட்ட ஒருவர்தான் தனிமையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறியுள்ளார் மீரா.