கேரளாவில் கர்ப்பிணிக்கு சிகிச்சை மறுப்பு...வயிற்றிலேயே இரட்டை குழந்தைகள் இறந்த சோகம்!!
மலப்புரம்: கொரோனா தொற்று அச்சம் காரணமாக கேரளாவில் மலப்புரத்தில் இருக்கும் மூன்று மருத்துவமனைகளில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு சிகிச்சை அளிக்க மறுத்ததால், அவரது வயிற்றிலேயே இரட்டை குழந்தைகள் இறந்த சோக சம்பவம் நடைபெற்றுள்ளது.
இதுகுறித்து அந்தப் பெண்ணின் கணவர் என்சி ஷெரீப் கூறுகையில், ''கடந்த சனிக்கிழமை அதிகாலை எனது மனைவிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து, பல்வேறு மருத்துவமனைகளுக்கு அவரை அழைத்து சென்றேன். அவருக்கு மருத்துவ உதவி செய்ய மறுத்துவிட்டனர்.
முதலில் எனது மனைவி ஷஹலாவை மஞ்சேரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றேன். அங்கு சிகிச்சை அளிக்க மறுத்துவிட்டனர். அது கொரோனா சிறப்பு வார்டு என்றும் சிகிச்சை அளிக்க மாட்டோம் என்றும் கூறிவிட்டனர்.
எனது மனைவிக்கு செப்டம்பர் மாத துவக்கத்தில் கொரோனா தொற்று இருந்தது. சிகிச்சைக்குப் பின்னர் செப்டம்பர் 15ஆம் தேதி வீடு திரும்பினார். இதையடுத்து, மீண்டும் செப்டம்பர் 18ஆம் தேதி வலி எடுத்தது. மஞ்சேரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றோம்.
ஞாயிற்றுக் கிழமை மீண்டும் ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்றபோது அவர்கள் முன்பு செய்யப்பட்ட நோய் எதிர்ப்பு பரிசோதனையை ஏற்றுக் கொள்ளவில்லை. மீண்டும் பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறிவிட்டனர். இதற்கு முன்னதாக எடாவா மருத்துவமனையில் அனுமதிப்பதற்கு முயற்சித்தேன். அங்கும் அவருக்கு கொரோனா நெகடிவ் என்று இருந்ததை காட்டியும் ஏற்றுக் கொள்ளவில்லை. மறுத்துவிட்டனர்.
தமிழகத்தில் விவசாயிகளுக்கு எதிரான பிடி கத்தரிக்காய் களப் பரிசோதனைக்கு ஸ்டாலின் எதிர்ப்பு
மஞ்சேரி மருத்துவமனையில் அனுமதிக்க மறுத்த பின்னர் கோழிக்கோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றேன். அங்கு பிரசவ மருத்துவர் இல்லை என்று கூறி, மீண்டும் கோழிக்கோடு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு செல்லுமாறு கூறிவிட்டனர். பின்னர் தனியார் மருத்துவமனை ஒன்றுக்கு சென்றபோது அங்கும் மீண்டும் பிசிஆர் பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறிவிட்டனர்.
இதையடுத்து முக்கம் என்ற இடத்தில் இருக்கும் கேஎம்சிடி மருத்துவமனையில் அனுமதித்தோம். அவர்களும் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தினர். அங்கு அறுவை சிகிச்சை செய்து குழந்தைகளை எடுத்தபோது, இறந்தே பிறந்தன'' என்றார்.
இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே. ஷைலஜா உத்தரவு பிறப்பித்து இருக்கிறார்.