கங்கையை அடுத்து யமுனையிலும் மிதக்கும் கொரோனா நோயாளிகளின் சடலங்கள்... கிராம மக்கள் அச்சம்
உத்தர பிரதேச மாநிலம் ஹமீர்பூர் மாவட்டத்தில் யமுனை நதியில் சடலங்கள் மிதப்பது அந்த பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹமீர்பூர்: யமுனை ஆற்றில் கொரோனா நோயினால் உயிரிழந்தவர்களின் சடலங்கள் மிதந்து வருவதால் கிராமவாசிகள் அச்சமடைந்துள்ளனர். இறந்த உடல்களை தகனம் செய்வதற்கு இடங்கள் இல்லாத சூழலில் இவ்வாறு சடலங்கள் தூக்கி எரியப்பட்டுள்ளதாகவும் நோய் பாதிப்பு அதிகரிக்கும் அபாயம் எழுந்துள்ளதாகவும் உள்ளூர்வாசிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
Recommended Video
உத்தர பிரதேசத்தில் கொரோனா இரண்டாம் அலை மிகவும் மோசமாக உள்ளது. அந்த மாநிலத்தில் கொரோனாவால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்வதற்கு பல தகன மயானங்களில் இடம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
உடல்களைத் தகனம் செய்ய விறகுகளும் கிடைக்கவில்லை. ஏழை குடும்பத்தைச் சேர்ந்த பலரும் பல ஆயிரம் செலவு செய்து தகனம் செய்ய முடியாத நிலையில் உள்ளதால் கொரோனா நோயினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அப்படியே ஆற்றில் விட்டு விடுகின்றனர். கங்கை ஆறுகளில் மிதந்து வரும் சடலங்களை நாய்கள் கடித்து குதறி சேதப்படுத்துகின்றன.
நேற்று பீகார்,இன்று உத்தர பிரதேசம்.. கங்கையில் தொடர்ந்து கரையொதுங்கும் சடலங்கள்..கொரோனாவின் கோரமுகம்
யமுனையில் சடலங்கள்
கங்கை ஆற்றில் நூற்றுக்கணக்கான சடலங்கள் மிதந்து வந்த நிலையில் தற்போது யமுனை ஆற்றிலும் ஏராளமான உடல்கள் மிதக்க விடப்படுகின்றன. உத்தரபிரதேச மாநிலம் ஹமீர்பூரில் உள்ள யமுனை ஆற்றில், இறந்த உடல்கள் பல மிதப்பதால் அப்பகுதியில் வாழும் உள்ளூர்வாசிகள் பீதியடைந்துள்ளனர்.
ஆற்றில் உடல்கள்
சடலங்கள் கொடிய கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கிராமவாசிகளின் உடல்கள் என்றும், இறந்த உடல்களை தகனம் செய்வதற்கு இடங்கள் இல்லாத சூழலில் இவ்வாறு சடலங்கள் தூக்கி எரியப்பட்டுள்ளதாகவும் உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர்.
பழமையான சடங்கு
இதுகுறித்து, ஹமீர்பூர் உதவி காவல்துறை கண்காணிப்பாளர் அனூப் குமார் சிங் விசாரணை மேற்கொண்டார், யமுனா நதி ஹமீர்பூருக்கும், கான்பூருக்கும் இடையிலான எல்லையாக பாய்கிறது. உள்ளூர்வாசிகள் இந்த நதியை புனிதமான ஒன்றாக கருதுகின்றனர். மேலும் இறந்த கிராமவாசிகளின் உடல்கள் ஆற்றில் மிதக்க விடுவது ஒரு பழமையான சடங்கு என தெரிவித்துள்ளார்.
மாசடையும் புனித ஆறுகள்
கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நோய் தொற்றுக்கு ஆளாகி தினசரியும் மரணமடைபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. புனித ஆறுகளாக கங்கை, யமுனையில் தூக்கி வீசப்படும் சடலங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. ஆற்றின் கரையோரங்களில் சடலங்கள் புதைக்கப்படுகின்றன. பல சடலங்கள் எரிக்கப்படுகின்றன. இதனால் ஆறுகளும் ஆற்றங்கரையோரமும் மாசடைந்து நோய் தொற்று அதிகரிக்கும் அச்சம் எழுந்துள்ளது.