குவியும் உடல்கள்.. அமரர் ஊர்தி தட்டுப்பாடு.. லாரியில் ஏற்றிசெல்லப்படும் உடல்கள்.. சத்தீஸ்கரில் அவலம்
ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் அரசு மருத்துவமனையில் பிணவறையில் இருக்கும் உடல்களை லாரியில் ஏற்றி கொண்டு செல்லும் அவல நிலை அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இளம் வயதினரை தேடி வரும் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேசன் ஆப் இந்தியா.. மைசூரு போனால் வேலை ரெடி
கொத்து, கொத்தாக உயிரிழப்பு ஏற்படுவதால் அமரர் ஊர்திக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு லாரியில் உடல்கள் கொண்டு செல்லப்படுவதாக மருத்துவமனை ஊழியர்களும், நகராட்சி அதிகாரிகளும் கூறினார்கள்.
கொரோனா மிக மோசம்
இந்தியாவில் கடந்த ஆண்டு முழுவதும் மக்களை பாடாய்படுத்திய கொரோனா இந்த முறை அதைவிட மிக மோசமாக உள்ளது. முதல் அலையில் கூட தடுப்பூசிகள் வரவில்லை என்பதால் கொரோனா ஆதிக்கத்தை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் தற்போது தடுப்பூசிகள் நமது கையில் இருந்தும் பாதிப்பு அதிவேகத்தில் சென்று வருவது மிகவும் வேதனையான விஷயமாகும்.
உடல்கள் வைக்க இடமில்லை
கொரோனா பாதிப்புகள் கட்டுக்குள் அடங்காமல் எங்கேயோ சென்று கொண்டிருப்பதால் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி விட்டன. கொத்து, கொத்தாக உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவதால் பெரும்பாலான மருத்துவமனைகளில் பிணவறைகள் நிரம்பி விட்டதால் உடல்கள் மருத்துவமனைக்கு வெளியே நீண்ட வரிசையில் காத்து கிடக்கின்றன.
நிரம்பிய பிணவறைகள்
சத்தீஸ்கர் மாநிலத்திலும் இதே நிலைதான் நீடித்து வருகிறது. சத்தீஸ்கரில் கொரோனா தினசரி பாதிப்புகள், தினசரி உயிரிழப்புகள் உச்சம் தொட்டு வருவதால் அங்குள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி விட்டன. இது மட்டுமில்லாது உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்து வருவதால் அரசு மருத்துவமனைகளில் பிணவறைகள் நிரம்பி விட்டன. இதனால் உறவினர்களிடம் அடையாளம் காண்பிக்கப்பட்டு உடல்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றன.
லாரியில் கொண்டு செல்லப்படும் உடல்கள்
இந்த நிலையில் ராய்ப்பூரில் உள்ள டாக்டர் அம்பேத்கர் மெமோரியல் (பிஆர்ஏஎம்) மருத்துவமனையில் உள்ள பிணவறையில் இருந்து வெளியே கொண்டு வரப்படும் உடல்கள் லாரிகளில் கொத்து, கொத்தாக ஏற்றப்பட்டு கொண்டு செல்லப்படும் காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உடல்கள் அதிகளவில் இருப்பதால் உடல்களை எடுத்து செல்லும் அமரர் ஊர்தி வாகனங்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் லாரிகளில் உடல்கள் கொண்டு செல்லப்படுவதாக மருத்துவமனை ஊழியர்களும், நகராட்சி அதிகாரிகளும் கூறினார்கள்.
உறவினர்கள் வேதனை
ஒரு மனிதன் இறப்புக்கு பிறகு அவருக்கு நாம் செய்யும் இறுதி மரியாதையை நல்ல முறையில் இறுதிச்சடங்கு செய்வதுதான். ஆனால் லாரிகளில் நாய்களின் உடல்களை கொண்டு செல்வதுபோல் மனிதர்களின் உடல்களை எடுத்து செல்வது பார்த்து இவர்களின் உறவினர்கள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர். இவை அனைத்துக்கும் காரணமான ஈவு இரக்கமற்ற கொரோனா எப்போது இந்த உலகை விட்டு விடை பெறும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.