ஹால் டிக்கெட் வாங்கிக் கொண்டு தேர்வு எழுத வராத ‘மாடு’... அதிகாரிகள் 'ஹேப்பி'!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தொழிற்கல்விக்கான நுழைவுத் தேர்வில் பங்கேற்பதற்காக ஹால் டிக்கெட் பெற்ற பசுமாடு, இன்று தேர்வு எழுத வரவில்லை.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் டிப்ளமோ படிப்புகளுக்கான தொழில்முறை பொது நுழைவுத் தேர்வு இன்று நடைபெற்றது. இந்தத் தேர்வில் கலந்து கொள்வதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைனில் வழங்கப்பட்டது.
Cow bunks exam in Jammu and Kashmir, despite having admit card http://t.co/HBI4vg4b1M pic.twitter.com/gJ7gBJEAGK
— NDTV (@ndtv) May 10, 2015
அவ்வாறு விண்ணப்பித்தவர்களுக்கு ஹால் டிக்கெட் வழங்கப்பட்டது. அப்போது ‘கசிர் காவ்' என்ற மாடு ஒன்றிற்கும் ஹால்டிக்கெட் வழங்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப் பட்டது. மாட்டின் கையெழுத்து இடம் பெற வேண்டிய இடத்தில் மாட்டின் வால் பகுதியும் அச்சிடப் பட்டிருந்தது. மேலும், தேர்வு எழுதுவதற்கு பெமினாவில் உள்ள அரசு கல்லூரியில் 5ம் நம்பர் அறையில், கசிர் கவ் மாட்டுக்கு இருக்கையும் ஒதுக்கப்பட்டிருந்தது.
இந்த விவகாரம் அம்மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களிலும் மாட்டின் ஹால்டிக்கெட்டை பதிவு செய்து, பலரும் கிண்டல் செய்து வந்தனர்.
இந்நிலையில், தேர்வு நாளான இன்று அம்மாடு தேர்வு எழுத வரும் என செய்தியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் பெமினா கல்லூரிக்கு முன்பு குவிந்திருந்தனர். ஹால் டிக்கெட் பெற்ற அந்தப் பசுவின் உரிமையாளரான அப்துல் ரஷித் பட் தனது பசுமாட்டுடன் வருவார் என அனைவரும் காத்திருந்தனர்.
ஆனால், தேர்வு எழுத பசு மாடு அழைத்து வரப்படவில்லை. இதனால் காத்திருந்து ஏமாந்த செய்தியாளர்கள் மற்றும் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
பசுமாடு தேர்வு எழுத வராததால், தேர்வு அறைக் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பசுவின் உரிமையாளரான பட், ‘அரசு நிர்வாகத்தில் உள்ள குளறுபடியை சுட்டிக்காட்டுவதற்காகவே நான் இவ்வாறு செய்தேன். இதை தவிர எனக்கு வேறெந்த உள்நோக்கமும் இல்லை' என்றார்.