பஞ்சாப்: பாஜக தலைவர் வீட்டுக்கு வெளியே விவசாயிகள் போர்வையில் சாண குவியலை கொட்டிய விஷமிகள்
பஞ்சாப்: பாஜக தலைவர் வீட்டுக்கு வெளியே விவசாயிகள் போர்வையில் சாண குவியலை கொட்டிய விஷமிகள்
அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலத்தில் பாஜக தலைவர் திக்ஷன் சூட் வீட்டுக்கு வெளியே விவசாயிகள் போர்வையில் சாண குவியலை விஷமிகள் கொட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
டெல்லியில் கடுமையான குளிரையும் பொருட்படுத்தாமல் மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் 38 நாட்களாக தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் எந்தவித அரசியல் சாயமும் பூசவிடாமல் கட்டுப்பாடுகளுடன் போராடுகின்றனர்.
இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு தரப்பும் படுதீவிரமாக முயற்சிக்கின்றன. இந்த நிலையில் விவசாயிகளுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக பஞ்சாப் மாநிலத்தில் விஷமிகள் செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் ஹோஷியார்பூரில் பாஜக மூத்த தலைவர் திக்ஷன் சூட் வீட்டுக்கு வெளியே சாணத்தை குவியலாக கொட்டிவிட்டு சென்றிருக்கின்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.