யாகூவின் ஆதிக்கம் செலுத்தியவர்கள் 2015 பட்டியல்- பிரபலங்களைப் பின்னுக்கு தள்ளிய பசுமாடு!
டெல்லி: சமூக வலைதளங்கள் மற்றும் இணையதளங்களில் இந்த வருடம் அதாவது 2015 ஆம் ஆண்டில் அதிக ஆதிக்கம் செலுத்தியவர்கள் பட்டியலில், யாகூவில் பிரதமர் மோடி உள்ளிட்ட பிரபலங்களைப் பின்னுக்கு தள்ளிவிட்டு பசுமாடு முதலிடத்தினைப் பிடித்துள்ளது.
இணையத்தில் கூகுளுக்கு இணையான இடத்தினைப் பெற்றுள்ள யாகூ நிறுவனம் 2015 ஆம் ஆண்டில் இந்தியாவில் ஆதிக்கம் செலுத்திய ஆளுமை மனிதர்கள், சம்பவங்கள், இணையத்தை கலக்கியவை போன்றவற்றை கணக்கில் எடுத்துக்கொண்டு அவற்றில் முதல் இடத்தை பிடித்த விஷயங்களை வெளியிட்டுள்ளது. இதில் பிரதமர் மோடி, மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் போன்ற பிரபலங்களை பின்னுக்கு தள்ளிவிட்டு பசுமாடு முதல் இடத்தை பிடித்துள்ளது.
இது தொடர்பாக யாகூ வெளியிட்ட அறிக்கையில் "மகாராஷ்டிரா அரசு மாட்டிறைச்சிக்கு தடை விதித்தது. இதனைத் தொடர்ந்து இணையத்தில் மாட்டிறைச்சி தொடர்பாக விவாதம் ஆரம்பித்தது.
அதன்பிறகு நடைபெற்ற தாத்ரி சம்பவம், கலைஞர்கள் விருதுகளை திருப்பி அளித்தது, சகிப்பின்மை தொடர்பான விவாதம் என பசுமாடு இந்த ஆண்டின் ஆதிக்கம் செலுத்திய ஆளுமையாக மாறிவிட்டது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.