பசுவை கொல்பவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை: இது உத்தரகாண்ட் முதல்வர்
ஹரித்துவார்: பசுவை கொல்பவர்கள் யாராக இருந்தாலும், எந்த சமூகத்தை சேர்ந்தவர்களாக இருப்பினும், அவர்கள் இந்தியாவின் மிகப்பெரிய எதிரி. அவர்களுக்கு இந்திய நாட்டில் வாழ உரிமை கிடையாது என்று, உத்தரகாண்ட் மாநில முதல்வர் (காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்) ஹரிஷ் ராவத் கூறியுள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடக்கிறது. முதல்வராக ஹரிஷ் ராவத் உள்ளார்.
இந்துக்களின் புனித நகரத்தில் ஒன்றான, ஹரித்துவாரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய, ஹரிஷ் ராவத் இவ்வாறு கூறியுள்ளார். ராவத் கூறியதாவது: பசுவை கொல்பவர்கள் யாராக இருந்தாலும், எந்த சமூகத்தை சேர்ந்தவர்களாக இருப்பினும், அவர்கள் இந்தியாவின் மிகப்பெரிய எதிரி. அவர்களுக்கு இந்திய நாட்டில் வாழ உரிமை கிடையாது
உத்தரகாண்ட் மாநிலத்தில் பசுவை கொல்பவர்களை சட்டம் பார்த்துக் கொள்ளும், பசுக்களை பாதுகாக்க மாநில அரசு எதையும் செய்ய தயார்.
பசுக்கள் கொல்லப்படுவதற்கு எதிராக சில பரிந்துரைகளை நான் தாக்கல் செய்துள்ளேன். நாட்டில் முதல்முறையாக உத்தரகாண்ட் மாநிலம் மட்டுமே பசுக்களுக்கு கொட்டகை அமைத்து, தீவனமும் வழங்கிவருகிறது. இவ்வாறு ராவத் பேசியுள்ளார்.
பசுவதைக்கு எதிராக பேசும் பாஜக அமைச்சர்கள், எம்.பிக்களை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கண்டித்து வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒரு மாநில முதல்வரே இவ்வாறு பேசியுள்ளது அக்கட்சிக்குள் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.