பசு கொல்லப்பட்டதாக சந்தேகம்... ஜார்கண்டில் முஸ்லிம் வீட்டை கொளுத்திய பசு 'பாதுகாவலர்கள்'!
ஜார்க்கண்டில் பசு கொல்லப்பட்டதாக எழுந்த சந்தேகம் காரணமாக பால் பண்ணை உரிமையாளர் கொடூரமான முறையில் தாக்கப்பட்டதோடு அவருடைய வீடு தீக்கு இறையாகியுள்ளது.
ராஞ்சி : பசுக்களை வைத்து பண்ணையம் செய்து வருபவரின் வீட்டு வாசலில் இறந்து கிடந்த பசுவைப் பார்த்து பசு பாதுகாவலர்கள் அவரை கொடூரமாகத் தாக்கி வீட்டையும் கொளுத்திவிட்டு சென்றுள்ளனர்.
ஜார்க்கண்ட் மாநிலம் பாரியாபாத்தில் பால் பண்ணை உரிமையாளர் உஸ்மான் அன்சாரி வீட்டிற்கு அருகே தலையில்லாமல் பசுவின் சடலம் ஒன்று கிடந்துள்ளது. இதனையடுத்து அந்தப் பகுதியில் கூடிய பசுப் பாதுகாவலர்கள் மற்றும் சில கும்பல் அவருடைய வீட்டை தீ வைத்து கொளுத்தின. தகவல் அறிந்து போலீசார் அங்கு சென் போதும் பசுப் பாதுகாவலாளர்கள் போலீசையும் கடுமையாக தாக்கியுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவத்தால் பலத்த காயத்துடன் உஸ்மான் அன்சாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனார். இதே போன்று 12-க்கும் அதிகமான போலீசாரும் தாக்குதலில் காயம் அடைந்து உள்ளனர்.
தடியடி
வன்முறை வெறியாட்டம் நடத்திய பசுப் பாதுகாவலாளர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திண்டாடினர். ஒரு கட்டத்தில் வேறு வழியின்றி பசு பாதுகாப்பு கும்பலை போலீஸ் தடியடி நடத்தியும், வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டும் விரட்டி உஸ்மான் குடும்பத்தாரை போலீஸ் காப்பாற்றியுள்ளனர்.
பாதுகாப்பு
இந்த சம்பவம் தொடர்பாக 25 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். உஸ்மான் அன்சாரியின் குடும்பம் போலீஸ் பாதுகாப்புடன் மற்றொரு பகுதியில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இலக்காகும் இஸ்லாமியர்கள்
இந்த சம்பவத்தை அடுத்து பாரியாபாத் பகுதிக்கு அம்மாநில சிறப்பு படை போலீஸ் மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் விரைந்து சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளது. நாடு முழுவதும் பசு பாதுகாவலர்கள் என கூறிக்கொள்பவர்களால் தலித்கள், இஸ்லாமியர்கள் தொடர்ந்து இலக்காக்கப்பட்டு வருகிறார்கள்.
தொடர்பதையாகும் தாக்குதல்கள்
கடந்த ஜூன் 22-ம் தேதி அரியானா மாநிலத்தை சேர்ந்த சிறுவன் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக கூறி ரெயிலில் சக பயணிகளால் அடித்துக் கொல்லப்பட்டான். கால்நடை சந்தைகளில் இறைச்சிக்காக மாடுகளை விற்கவோ, வாங்கவோ கூடாது என தடை விதித்தும், மாடு வாங்கல், விற்றலை ஒழுங்குபடுத்தியும் மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் ‘மிருகவதை தடை தடுப்பு விதிகள்- 2017' என்ற அறிவிக்கையை வெளியிட்டது. இதனையடுத்து பசுப் பாதுகாவலாளர்களால் இது போன்ற சம்பவங்கள் தொடர்கதையாகி வருவது குறிப்பிடத்தக்கது.