இமாச்சலில் பசுக்களை கடத்தியதாக உ.பி.யை சேர்ந்தவர் கும்பலால் அடித்துக்கொலை!
சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தில் பசுமாடுகளை கடத்தியதாக உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை பொதுமக்கள் அடித்துக் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இமாச்சல பிரதேசத்தின் சிராமூர் மாவட்டத்தில் நாகன் என்ற இடத்தில் சிலர் எருமை மாடுகளை லாரியில் ஏற்றி சென்றுள்ளனர்.
அவர்கள் பசுமாடுகளை கடத்திச் செல்வதாக தகவல் பரவியதை அடுத்து அந்த லாரியை பொதுமக்கள் துரத்தி சென்றனர். அப்போது லாரியில் இருந்த 5 பேர் தப்பி ஓடினர்.
இவர்களை தேடி பிடித்து பொதுமக்கள் தாக்கினர். இதில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயது இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தகவல் அறிந்த போலீசார் எஞ்சிய 4 பேரையும் உயிரோடு மீட்டனர்.
உத்தரப்பிரதேசத்தின் தாத்ரியில் மாட்டிறைச்சி சாப்பிட்டதாக இஸ்லாமியர் முதியவர் இக்லால் அடித்துக் கொல்லப்பட்ட நிலையில் பசுக்களை கடத்தியதாக தற்போது இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.