கோமியம் குடித்தால் கொரோனா குணமாகாது.. பாஜக தலைவர்களுக்கு மேகாலயா ஆளுநர் ததகதா ராய் "கொட்டு"!
கொல்கத்தா: கோமியம், கொரோனா பாதிப்பை குணப்படுத்தும் என்ற பேச்செல்லாம் நகைப்புக்குரியது என்று மேகாலயா ஆளுநர் ததகதா ராய் தெரிவித்துள்ளார்.
74 வயதாகும் ததகதா ராய், 2002 முதல் 2006ஆம் ஆண்டு வரை மேற்கு வங்க மாநில பாஜகவின் தலைவராக பதவி வகித்தவர். தீவிர அரசியலில் இருந்த இவருக்கு, 5 வருடங்கள் முன்பு, மேகாலயா ஆளுநர் பதவி வழங்கப்பட்டது.
மேகாலயா ஆளுநராக இவரது பதவிக்காலம் கடந்த மே மாதத்துடன் நிறைவடைந்தநிலையில், தற்போது அவருக்கு பதவி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
அயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளை தலைவருக்கு கொரோனா.. பிரதமர் மோடியுடன் பூமி பூஜை விழாவில் பங்கேற்றவர்
எதிர்ப்பு சக்தி
இந்த நிலையில்தான் ஆங்கில இணையத்தளம் ஒன்றுக்கு அளித்துள்ள பிரத்தியேக பேட்டியில், தான் தீவிர அரசியலுக்கு திரும்ப விரும்புவதாக அவர் கூறியுள்ளார். மேலும் அவர் தெரிவித்துள்ளதை பாருங்கள்: எங்களது தலைவர்கள் சிலர் பசு கோமியம் அல்லது பசுஞ்சாணி ஆகியவற்றில் கொரோனா வைரசுக்கு எதிரான எதிர்ப்பு சக்தி இருப்பதாக பிரச்சாரம் செய்வதை பார்த்து மனம் வேதனைப்படுகிறது. இதுபோன்ற பேச்சுக்கள் பசும்பாலில் தங்கம் இருப்பது போன்ற கருத்துக்கள் எல்லாம் நகைப்புக்குரியதாக மாறிவிட்டன.
பாஜக தலைவர் கருத்து
நான் தனிப்பட்ட நபர்களை குற்றம் கூறவில்லை. விமர்சனம் செய்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார். தற்போது மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக தலைவராக உள்ள திலிப் கோஷ், பசு கோமியம் கொரோனா வைரஸை குணப்படுத்தும் என்று பொதுவெளியில் கருத்து கூறியிருந்த நிலையில், ததகதா ராய் பேட்டி முக்கியத்துவம் பெறுகிறது. மேலும் அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதை பாருங்கள்.
கம்யூனிஸ்ட்சுகளுக்கு எதிரான அரசியல்
பசு கோமியம் தொடர்பான கருத்துக்கள், எனக்கு தனிப்பட்ட முறையில் வேதனையையும் அவமானத்தை ஏற்படுத்துகிறது. சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக உள்ளேன். பல புத்தகங்களை எழுதியுள்ளேன். குறிப்பாக கம்யூனிஸ்ட் கட்சியின் வன்முறை மனநிலை பற்றியும், வன்முறை சம்பவங்கள் பற்றியும் புத்தகம் எழுதி உள்ளேன். பல மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி அழிவை தேடித் தந்துள்ளது. மேற்கு வங்கமும் அதில் ஒன்று. சமீபத்தில் ஐரோப்பிய நரம்பியல் இதழ் ஒன்றில், லெனின், பாலியல் நோய் காரணமாக பாதிக்கப்பட்டு உயிரிழந்தார் என்று தகவல் வெளியானது. அதை நான் பகிர்வு செய்து இருந்தேன். கம்யூனிஸ்டுகள் இந்த உண்மையை ஏற்க முடியாமல் மோசமான வார்த்தைகளால் விமர்சனம் செய்கிறார்கள்.
கோமியம் கருத்து
பசு சாணம், கோமியம் போன்றவற்றை குடிக்குமாறு என்னை அவர்கள் திட்டுகிறார்கள். நான் இதற்காக இது போன்ற பேச்சுக்களை தாங்கிக் கொண்டிருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. பசு தொடர்பான அறிவியல் பூர்வமற்ற கருத்துகளை எங்கள் கட்சியினர் பகிர்வதால்தான் இதுபோன்ற பேச்சுக்களை கேட்க வேண்டியிருக்கிறது. கோமியத்தை குடிக்குமாறு கூறும் கருத்துக்கள் எதுவுமே அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படாதவை.
கட்சி கட்டுப்பாடு
நான் அரசியலில் மிகுந்த ஈடுபாடு கொண்ட நபர். என்னை சில காரணங்களுக்காக ஆளுநராக்கியுள்ளனர். ஆளுநர் பதவி தரப்பட்டுள்ளதாக எனக்கு தகவல் வந்தபோது நான் அதை மறுப்பு சொல்லாமல் ஏற்றுக்கொண்டேன். ஏனென்றால் நான் கட்சியின் கட்டுப்பாட்டுக்கு கட்டுப்பட்டவன். ஆளுநராக ஐந்து வருட காலத்தை பூர்த்தி செய்துள்ளேன். இப்போது நான் அரசியலுக்கு திரும்ப வர விரும்புகிறேன்.
வாழ்க்கை
25 வருடங்கள் அரசியலுக்காக எனது வாழ்க்கையை அர்ப்பணம் செய்து உள்ளேன். மேற்குவங்க மாநிலத்தில் பாஜக ஒரு சக்தியாக உருமாறும் என்று யாருமே நினைத்திராத காலகட்டத்தில் நான் பாஜகவுடன் இருந்துள்ளேன். எனது நண்பர்கள் இந்த கட்சியில் இருக்கிறாயே என்று கிண்டல் செய்யும்போது கூட நான் சோர்ந்து போனது கிடையாது. கட்சியின் கொள்கைகளில் எப்போதும் எனக்கு நம்பிக்கை இருந்தது. கடந்த ஆண்டு பாஜக தலைவர் அமித் ஷாவை சந்தித்த போது, தீவிர அரசியலில் ஈடுபட விரும்புவதை தெரிவித்திருந்தேன். அவர் புன்னகைத்தார்.
அரசியல் ஆர்வம்
எனக்கு அரசியல் ஆர்வம் இருப்பது, பல மேலிட தலைவர்களுக்கு தெரியும். கட்சித்தலைமை என்னை தீவிர அரசியலில் ஈடுபட சொன்னால் அதை செய்ய தயாராக இருக்கிறேன். எனது வயதை காரணம் காட்டி, தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்குமாறு கூறினால் அதையும் ஏற்று வேறு பணிகளில் ஈடுபடலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.