குறைந்து வருகிறதா இடதுசாரிகள் செல்வாக்கு? அன்று மேற்குவங்கம், இன்று திரிபுரா!
மார்க்சிஸ்ட் கட்சியின் கோட்டையான மேற்குவங்கத்தில் எப்படி திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முடிவுக்கு கொண்டு அதே போன்று திரிபுராவில் 25 ஆண்டுகால மார்க்சிஸ்ட் ஆட்சியை பாஜக முடிவுக்கு கொண்டுவந்துள்ளது.
Recommended Video
டெல்லி : மார்க்சிஸ்ட் கட்சியின் கோட்டைகளாக இருந்தவை மேற்குவங்கமும், திரிபுராவும். 2011ம் ஆண்டு தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஏறத்தாழ 33 ஆண்டுகள் நடைபெற்று வந்த மார்க்சிஸ்ட் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தது. இதே போன்று 2018ல் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாஜக ஆட்சியை கைப்பற்றி ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கட்சியை பின்னுக்குத் தள்ளியுள்ளது.
இந்தியாவில் மொத்தமுள்ள 31 மாநிலங்களில் கடந்த 4 ஆண்டுளில் பாஜக வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. 2014க்குப் பிறகு நடைபெற்ற சட்டசபை தேர்தல்களில் சுமார் 20 மாநிலங்களில் பாஜகவின் நேரடி ஆட்சியும்,கூட்டணி ஆட்சியும் நடைபெற்று வருகிறது.
முதலாளித்துவம், பேரரசுவாதம் மற்றும் உலகமயமாக்கல் ஆகியவற்றை எதிர்த்துவரும் மார்க்சிஸ்ட் கட்சி இந்தியாவிலுள்ள பொதுவுடைமைக் கட்சி. இந்தக் கட்சி தனது வேரை ஆழப்பதிந்திருந்தது கேரளா, மேற்குவங்கம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில்.
கேரளாவில் மார்க்சிஸ்ட் ஆட்சி
கேரளாவில் இன்று வரை மார்க்சிஸ்ட் கட்சி அசைக்க முடியாத கட்சியாக இருந்து வருகிறது. 2016 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தி பினராயி விஜயன் ஆட்சியமைத்தார்.
34 ஆண்டுகள் ஆட்சி செய்த மார்க்சிஸ்ட்
மேற்குவங்கத்தை பொறுத்தவரை 1977 முதல் 2000 ஆண்டு வரை சுமார் 23 ஆண்டுகள் மக்கள் செல்வாக்கு பெற்ற முதல்வராக இருந்தார் ஜோதி பாசு. அவருக்குப் பின்னர் 2000 ஆண்டு முதல் 2011 வரை மார்க்சிஸ்ட் கட்சியின் புத்ததேவ் பட்டாச்சாரியா முதல்வராக இருந்தார்.
சிபிஎம் கட்சியை வீழ்த்திய மம்தா
2011ல் ஆறு கட்டங்களாக நடந்த சட்டசபைத் தேர்தல்களில் மாபெரும் வெற்றி பெற்று 34 ஆண்டுகள் தொடர்ந்து ஆண்டு வந்த இடதுசாரி முன்னணி அரசினை வீழ்த்தினார். மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் 294 இடங்கள் உள்ள சட்டசபையில் 184 இடங்களைக் கைப்பற்றி கூட்டணிக் கட்சியான காங்கிரசுடன் 227 இடங்களைப் பிடித்தது.
மீண்டு வர முடியவில்லை
2011ல் மேற்குவங்க முதல்வராகப் பொறுப்பேற்ற மம்தா பானர்ஜி 2016 சட்டசபை தேர்தலிலும் வெற்றி பெற்று அங்கு தொடர்ந்து ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளார். மார்க்சிஸ்ட் கட்சியின் ஆணிவேறாக இருந்த இந்த மாநிலத்திலேயே மக்கள் மத்தியில் அந்தக் கட்சியின் செல்வாக்கு சரிந்து வருவதை அடுத்தடுத்த தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டின.
பறிபோனது திரிபுரா
திரிபுராவில் தொடர்ந்து 25 ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கட்சி ஆட்சியில் உள்ளது. ஆனால் இங்கும் மார்க்சிஸ்ட் கட்சியின் ஸ்திரத்தன்மையை அசைத்து பார்த்திருக்கிறது பாஜக. பாஜக 40 இடங்களில் முன்னிலை பெற்று ஆட்சி அமைப்பதை உறுதி செய்துள்ளது. இதில் அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால் மார்க்சிஸ்ட் கட்சி 19 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது.