செங்கொடி vs காவிக்கொடி.. அரசியல் மோதல்களால் நரகமாகும் கடவுளின் தேசம்!
திருவனந்தபுரம்: கேரளத்தில் செங்கொடி கட்சிகளான இடதுசாரிகளுக்கும், காவிக்கொடி கட்சியான பாஜகவினருக்கும் நடுவே மோதல் முற்றிக்கொண்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் நீருபூத்த நெருப்பாக இருந்த மோதல், இடதுசாரிகள் ஆட்சி அமைந்துள்ள நிலையில் பெரும் பிரளயமாக வெடிக்க தொடங்கியுள்ளது.
பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி அரசு அமைந்தது முதல், பொதுத்தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் மற்றும் பாஜகவிற்காக ஈடுபாடோடு உழைத்த நிர்வாகிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அடித்து நொறுக்கி வருகிறார்கள்.
இதுகுறித்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் டெல்லி மேலிட பாஜக நிர்வாகிகள் புகார் அளித்தனர். டெல்லியில் மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகம் எதிரே பாஜகவினர் போராட்டம் நடத்தினர். அது வன்முறையில் முடிந்தது.
இந்நிலையில், கன்னூரை சேர்ந்த பாஜக நிர்வாகியின் 7வயது மகனின் கையை மார்க்சிஸ்ட் தொண்டர்கள் வெட்டிய சம்பவம் நேற்று இரவு நடைபெற்றுள்ளது.
சிறுவன் மீது தாக்குதல்
பாஜக நிர்வாகியான ராகுலின் 7 வயது மகன் கார்த்திக்கை, வீடுபுகுந்து வெட்டியுள்ளனர் மார்க்சிஸ்ட் தொண்டர்கள். ராகுலை வெட்ட வந்தபோது அவர் வீட்டில் இல்லாததால் கார்த்திக் கையை வெட்டியுள்ளனர். அதிருஷ்டவசமாக சிறுவனுக்கு கை பறிபோகவில்லை.
|
சிகிச்சை
மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சிறுவனை, கேரள பாஜக தலைவர் கும்மனம் ராஜசேகரன் நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறியதோடு, சிறுவனின் புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்திலும் போட்டுள்ளார்.
இப்படித்தான் ஆரம்பம்
சிறுவனின் தாய் கடந்த உள்ளாட்சி தேர்தலில் பாஜக சார்பில், போட்டியிட்டதாகவும், அப்போது போட்டியில் இருந்து விலகுமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சிலர் ராகுலுக்கு கொலைமிரட்டல் விடுத்திருந்ததாகவும் தெரியவந்துள்ளது. இருப்பினும் அவர் தனது மனைவியை போட்டியிலிருந்து விலக சம்மதிக்கவில்லை.
காவல்துறை மறுப்பு
இந்த நிலையில் முன்விரோதம் தொடர்ந்து கொண்டிருந்தது. தற்போது இடதுசாரிகள் ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், தாக்குதல் அரங்கேற்றப்பட்டுள்ளது. அதேநேரம், காவல்துறை இந்த தாக்குதலை மார்க்சிஸ்ட் செய்யவில்லை என்று கூறியுள்ளது. குடும்ப தகாராறில் உறவுக்காரர் ஒருவர்தான் சிறுவனை வெட்டிவிட்டதாக காவல்துறை கூறியுள்ளது.
கடந்த 3 மாதங்களில் பாஜகவை சேர்ந்த இருவரும், மார்க்சிஸ்டை சேர்ந்த ஒருவரும் மோதல்களில் கொலை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.