மே.வங்க உள்ளாட்சி தேர்தல்: திரிணாமுல் காங்கிரஸை வீழ்த்த சிபிஎம்-பாஜக கூட்டணி
மேற்கு வங்க உள்ளாட்சி தேர்தலில் பாஜகவும் மார்க்சிஸ்ட் கட்சியும் கூட்டணி அமைத்துள்ளன.
Recommended Video
கொல்கத்தா: மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை வீழ்த்த பரம எதிரிகளான மார்க்சிஸ்ட் கட்சியும் பாஜகவும் கூட்டணி அமைத்துள்ளன.
மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் வன்முறையை ஏவிவிடுகிறது என்பது மார்க்சிஸ்ட், பாஜகவின் குற்றச்சாட்டு. இந்த வன்முறைகளைக் கண்டித்து கடந்த வாரம் நாடியாவில் பேரணி நடைபெற்றது.
இப்பேரணியில் மார்க்சிஸ்ட் மற்றும் பாஜக தொண்டர்கள் தங்கள் கட்சி கொடிகளுடன் பங்கேற்றனர். கொள்கை அளவில் நேர் எதிரிகளான பாஜகவும் மார்க்சிஸ்ட் கட்சியும் கை கோர்த்திருப்பது ஆளும் திரிணாமுல் காங்கிரஸுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
அத்துடன் கிராமப்புறங்களில் மார்க்சிஸ்ட், பாஜக இடையே கூட்டணியும் உருவாகி உள்ளது. மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பாஜக வேட்பாளர்கள் வாபஸ் பெற்றிருக்கின்றனர். அதேபோல் பாஜகவுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் வேட்பாளர்கள் வாபஸ் பெற்றுள்ளனர்.
இந்த கூட்டணியை இரு கட்சி மாநில தலைமைகளுமே ஒப்புக் கொண்டுள்ளன. தேசிய அளவில் பாஜகவை வீழ்த்த 3-வது அணியை மமதா உருவாக்கி வருகிறார். ஆனால் மமதாவின் கூட்டணி முயற்சியானது பாஜகவுக்குதான் சாதகம் என கூறி வருகிறது.
தற்போது பாஜகவுடனேயே மார்க்சிஸ்ட் கட்சி கை கோர்த்திருப்பது அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.