மத்திய அரசு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம்.. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் நோட்டீஸ்!
பாஜக அரசு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் நோட்டீஸ் கொடுத்துள்ளது.
டெல்லி : மத்திய பாஜக அரசு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு மக்களவைச் செயலாளரிடம் நோட்டீஸ் கொடுத்துள்ளது. இந்நிலையில், பாஜக மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரக்கோரும் கட்சிகளின் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது.
ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க பலமுறை கோரிக்கை வைத்தும் மத்திய அரசு செவிசாய்க்காததால், தெலுங்கு தேசம் மற்றும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி எம்.பி.,க்கள் நாடாளுமன்ற லோக்சபாவில் நோட்டீஸ் கொடுத்துள்ளன.
ஆனால், தொடர்ந்து ஆந்திர விவகாரம் மற்றும் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து எம்.பி.,க்கள் போராட்டம் நடத்தி வருவதால், இந்த தீர்மானத்தை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள முடியாது என்று சபாநாயகர் ஏற்கனவே அறிவித்து இருந்தார்.
இதனையடுத்து, காங்கிரஸ் கட்சி சார்பிலும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவது தொடர்பாக சபாநாயகரிடம் கடிதம் கொடுக்கப்பட்டு இருந்தது. அதில் 27ம் தேதி தீர்மானத்தை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், தற்போது மார்க்சிஸ்ட் கட்சியும் பாஜக மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கோரி நோட்டீஸ் அளித்துள்ளது. மார்க்சிஸ்ட் கட்சியின் லோக்சபா தலைவர் கருணாகரன், இதற்கான கடிதத்தை சபாநாயகரிடம் வழங்கியுள்ளார்.
இதனையடுத்து, மத்திய பாஜக அரசு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரக்கோரும் கட்சிகளின் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளது. மேலும், தொடர்ந்து எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபட்டு வருவதால், தீர்மானம் விவாததிற்கு நாளை எடுத்துக்கொள்ளப்படுமா என்கிற சந்தேகமும் எழுந்துள்ளது.
இதனிடையே, நாளை காங்கிரஸ் கட்சியின் அனைத்து எம்.பிக்களும் நாடாளுமன்ற நடவடிக்கையில் பங்கேற்க வேண்டியது கட்டாயம் என்று அக்கட்சி கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.