மே. வங்கத்தில் மார்க். கம்யூ படு வீக்.. காங்கிரஸுடன் கூட்டணி வைக்க சோம்நாத் சட்டர்ஜி அட்வைஸ்
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கட்சி பலவீனமாக இருப்பதால் காங்கிரஸுடன் கூட்டணி அமைப்பதுதான் சரியானதாக இருக்கும் என்று முன்னாள் மூத்த இடதுசாரித் தலைவர் சோம்நாத் சட்டர்ஜி தெரிவித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவராக திகழ்ந்தவர் முன்னாள் லோக்சபா சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி. மார்க்சிஸ்ட் கட்சியுடன் முரண்பாடு ஏற்பட்டு காங்கிரஸுக்கு ஆதரவாக செயல்பட்டதால் அவர் 2008ஆம் ஆண்டு கட்சியை விட்டு நீக்கப்பட்டார்.
அதன் பின்னர் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியுள்ளார். இந்த நிலையில் அடுத்த ஆண்டு மேற்கு வங்க சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் இழந்த ஆட்சியைக் கைப்பற்ற வேண்டிய கட்டாயத்தில் மார்க்சிஸ்ட் கட்சி உள்ளது.
திரிணாமுல் காங்கிரஸை வீழ்த்த காங்கிரஸுடன் மார்க்சிஸ்ட் கட்சி கூட்டணி அமைக்கக் கூடும் எனக் கூறப்பட்டு வருகிறது. இது குறித்து 37 ஆண்டுகளுக்குப் பின்னர் கொல்கத்தாவில் தற்போது நடைபெற்று வரும் மார்க்சிஸ்ட் கட்சியின் சிறப்பு மாநாட்டில் விவாதித்து முடிவெடுக்கப்பட உள்ளது.
இதனிடையே செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மாஜி இடதுசாரித் தலைவர் சோம்நாத் சட்டர்ஜி, மார்க்சிஸ்ட் கட்சியில் சீதாராம் யெச்சூரியால் மாற்றங்களை கொண்டுவந்துவிட முடியும். ஆனால் பொலிட்பீரோவில் அவருக்கு பெரும்பான்மை இருக்கிறதா? என்பது சந்தேகமே.
கொல்கத்தாவில் நடைபெற்று வரும் சிறப்பு மாநாடு அக்கட்சிக்கு வலிமையைத் தரலாம். மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியை வீழ்த்த இடதுசாரிகள், காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து மதச்சார்பற்ற சக்திகளும் ஓரணியில் திரள வேண்டும். தற்போதைய நிலையில் மார்க்சிஸ்ட் கட்சி தனித்து வெல்லும் நிலையில் மேற்கு வங்கத்தில் வலுவானதாக இல்லை என்றார்.