தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிக்கக் கூடாது.. டெல்லி மக்களுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
காற்று மாசுப்படுவதால் தீபாவளி பண்டிகையின்போது பட்டாசுகளை விற்கவோ வாங்கவோ, வெடிக்கவோ கூடாது என்று டெல்லி மற்றும் சுற்றுப்புற பகுதிகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
டெல்லி : தீபாவளி பண்டிகைக்கு பட்டாசுகளை வெடிக்கக் கூடாது என்று டெல்லி மக்களுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
பட்டாசுகளை வெடிப்பதால் காற்று மாசுப்படுவதால் டெல்லியில் பட்டாசு விற்பனைக்கு உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தடை விதித்தது. மேலும் பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்குவதும் நிறுத்தப்பட்டது.
எனினும் பட்டாசுகளை வெடிப்பதை தடுக்கவோ அல்லது கண்காணிக்கவோ முடியாததால் அதற்கு தடை ஏதும் இல்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது. காற்று மாசு ஏற்படும் விதத்தில் பட்டாசுகள் தயாரிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவிடப்பட்டது.
பட்டாசு விற்பனைக்கு தடை விதித்த உச்சநீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் இந்த தடைகளை தற்காலிகமாக திரும்ப பெற்றது. மேலும் தீபாவளி பண்டிக்கைக்கு பிறகு, காற்று மாசு எவ்வாறு உள்ளது என்பதை பார்க்க வேண்டி இருப்பதால் இந்த ஆண்டு பட்டாசுக்கான தடையை நீக்கியது.
இந்நிலையில் பட்டாசுகளை வெடிப்பதால் காற்று மாசு ஏற்படுகிறது என்றும் வரும் 2030-இல் உலகிலேயே காற்று மாசு உள்ள நகரமாக டெல்லி முன்னிலை வகிக்கும் என்றும் இதனால் ஏராளமானோர் உயிரிழக்க நேரிடும் என்றும் சங்கர் நாராயணன் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவானது இன்று நீதிபதிகள் அசோக் பூஷன், ஏ.கே. கோயல் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பட்டாசுகளுக்கு மீது கடந்த ஆண்டு விதிக்கப்பட்ட தடையை உறுதி செய்தது. அதன்படி இந்த மாதம் இறுதி வரை டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பட்டாசுகளை வெடிக்கவும், விற்கவும், லைசன்ஸ் வழங்கவும் தடை விதித்து உத்தரவிட்டனர்.