டுவிட்டர் புரட்சியால் கேரள ஆட்டோ ஓட்டுனருக்கு அடித்த அதிர்ஷ்டம்!
கேரளாவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரின் வித்தியாசமான முயற்சிக்கு மஹிந்திரா நிறுவனம் மினிவேனை பரிசாக அளித்துள்ளது.
திருவனந்தபுரம் : ஸ்கார்பியோ மீதான காதலை வித்தியாசமாக வெளிப்படுத்திய ஆட்டோ ஓட்டுனர் சுனிலுக்கு மஹிந்திரா நிறுவனம் வேனை பரிசளித்து அவரை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
எந்த ஒரு விஷயத்தையும் வித்தியாசமாக வெளிப்படுத்தினால் அது அனைவரிடமும் பெரும் வரவேற்பை பெறுவதோடு,அதற்கான சன்மானத்தையும் பெற்றுத் தரும் என்பவதற்கு சிறந்த உதாரணம் கேரளாவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் சுனில். நம்மிடம் இருப்பவற்றை வைத்து நமது கனவு, ஆசையை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்பதை நிரூபிக்கும் விதமாக ஸ்கார்பியோ கார் மீது தீராத காதல் கொண்ட சுனில், தன்னுடைய ஆட்டோவையே ஸ்கார்ப்பியோ கார் போல வடிவமைத்துள்ளார்.
சமூக ஊடகங்களில் கடந்த மாதம் வைரலாக பரவிய சுனிலின் ஸ்கார்ப்பியோ ஆட்டோ, யாரோ ஒருவர் மூலமாக மஹிந்திரா நிறுவனத் தலைவர் ஆனந்த் மஹிந்திராவிற்கு கிடைத்துள்ளது. இதனையடுத்து அந்த நபரை கண்டுபிடிக்கும்படி டீலர்களுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். ஒன்றரை மாத தேடுதலுக்குப் பிறகு கேரளாவைச் சேர்ந்த சுனிலை கொச்சி டீலர்கள் அடையாளம் கண்டுள்ளளனர்.
Here's Sunil, the proud owner of the 3 wheeler 'Scorpio', now a happy owner of a 4 wheeler. All thanks to you twitterati! (2/2) pic.twitter.com/5nb12j2dnj
— anand mahindra (@anandmahindra) May 3, 2017
இந்த செய்தியை மகிழ்ச்சியோடு பதிவிட்டுள்ள ஆனந்த் மஹிந்திரா, "எங்கள் குழு, சுனிலைக் கண்டுபிடித்துவிட்டது. ஸ்கார்ப்பியோ ஆட்டோவை வாங்கிக்கொண்டு, ஃபோர் வீலரான "மஹிந்திரா சூப்பர் மினி ட்ரக்கை" அளித்திருக்கிறோம். இப்போது சுனில் ஒரு ஹேப்பியான வாகன உரிமையாளர்" என்று ஆனந்த் மஹிந்திரா டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.